ஊருக்காக ஆடிய கலைஞன்.. அனுமன் வேடத்தில் மேடையில் சரிந்து விழுந்து காற்றில் கலந்த உயிர்..ஷாக் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அனுமன் வேடமிட்டு ஆடிய கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
மேலும், இந்து அமைப்பினர், பல்வேறு சங்கங்கள் சார்பில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு தொடர்ச்சியாக பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
இந்நிலையில் தினமும் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பல இடங்களில் விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு உத்தர பிரதேச மாநிலம் மணிப்பூரி பகுதியில் உள்ள கோட்வாளியில் சிவன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.

சரிந்து விழுந்த கலைஞர்
ரவிசர்மா என்ற கலைஞர் அனுமன் வேடமிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பக்தர்கள் சுற்றி அமர்ந்து இருக்க ரவி சர்மா அனுமன்போல் செயல்களை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விழுந்தார். சில வினாடிகள் அவர் எழுந்திரிக்காமல் அப்படியே கிடந்ததால் அங்கு இருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை.

இறந்துபோன கலைஞர்
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மாவட்ட அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காரணம் என்ன?
நாட்டுப்புற கலைஞரான ரவி சர்மா மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அனுமன் வேடத்தில் ஆடிய மேடையிலேயே அவர் சரிந்து விழுந்து இறந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இறந்த ரவி சர்மாவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications