ஹோலி பண்டிகை.. உத்தர பிரதேசத்தில் உள்ள மசூதிகள் தார்ப்பாய்களை கொண்டு மூடல்! என்ன காரணம்?
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதி உட்பட 10 மசூதிகள் தார்ப்பாய்களைக் கொண்டு மூடப்பட்டுள்ளன. நாளைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு சமூகத்திற்கும் இடையே எந்தவொரு சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.
இப்போது முஸ்லீம்கள் ரமலான் மாதம் கடைப்பிடிக்கிறார்கள். ரமலான் மாதத்தின்போது காலை முதல் மாலை வரை நோன்பு இருக்கும் முஸ்லீம்கள், மாலையில் நோன்பை முடித்துக் கொள்வார்கள். இதுபோல ஒரு மாதம் முழுக்க நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். மேலும், வெள்ளிக்கிழமை தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு முக்கியமானதாகும்.

ஹோலி பண்டிகை
நாளை வெள்ளிக்கிழமை தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. வட இந்தியாவில் எப்போதும் ஹோலி பண்டிகை மிகப் பெரியளவில் கொண்டாடப்படும். ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். அப்போது வடமாநிலங்களில் பல இடங்களில் இரு மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும். இதற்கிடையே இதைத் தடுக்க உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தார்பாய் கொண்டு மூடல்
அதாவது அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதி உட்பட 10 மசூதிகள் தார்ப்பாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகை சமயத்தில் எந்தவொரு சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். இரு சமூகத்தினரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஹோலி ஊர்வலத்தின் பாதையில் உள்ள அனைத்து மதத் தலங்களும் இதுபோல மூடப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ்சந்திரா தெரிவித்தார்.
கைது நடவடிக்கை
மேலும், மோதல் ஏற்படுவதைத் தடுக்க உத்தரப் பிரதேச போலீசார் இதுவரை 1,015 பேரைக் கைது செய்துள்ளதாகச் சம்பல் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் வந்தனா மிஸ்ரா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சம்பலில் உள்ள பல்வேறு மசூதிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தை பல்வேறு பிரிவுகளைப் பிரித்து, பாதுகாப்புப் பணிகளைக் கவனித்து வருகிறோம். ஹோலிக்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஹோலி அமைதியாகக் கொண்டாடப்படுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
ஹோலிகாக தற்போது மூடப்பட்ட மசூதிகளில் ஒன்று ஜமா மசூதி.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து கோவிலின் மேல் இந்த ஜமா மசூதி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அங்கு சர்வே நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைக் கண்டித்து அங்கு நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அனுஜ் குமார் சவுத்ரி
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோலி கொண்டாட்டம் தொடர்பாகச் சம்பல் மூத்த காவல்துறை அதிகாரி அனுஜ் குமார் சவுத்ரி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. அவர் கூறுகையில், "உங்கள் மீது கலர் படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஹோலி கொண்டாடப்படும் இடத்திற்கு வர வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆண்டுக்கு 52 முறை வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்த முடியும். ஆனால் ஹோலிக்கு ஒரு நாள் மட்டுமே வருகிறது.
முஸ்லிம்கள் ஈத் பண்டிகைக்காகக் காத்திருப்பது போல, இந்துக்கள் ஆண்டு முழுவதும் ஹோலி பண்டிகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஹோலி கலர்கள் உங்கள் மீது படக்கூடாது என விரும்பினால் நீங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
யோகி ஆதித்யநாத்
அனுஜ் குமார் சவுத்ரியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. இருப்பினும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருக்கு ஆதரவான கருத்துகளையே கூறினார். யோகி ஆதித்யநாத் கூறுகையில், "அவர் கூறியது உண்மை தான்.. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஹோலி வருகிறது. இருந்தும் கூட மதியம் 2 மணி வரை ஹோலி கொண்டாடலாம். பிறகு தொழுகை நடத்தலாம் என இரு சமூகத்தினரும் முடிவெடுத்துள்ளனர். அதன்படியே பாதுகாப்புப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications