அடேங்கப்பா.. வெறும் 100 மணி நேரத்தில் 100 கிமீ தொலைவிற்கு எக்ஸ்பிரஸ்வே ரெடி! இது எப்படி சாத்தியம்
லக்னோ: இந்தியாவில் இப்போது பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலையில் 100 கிமீ தூரத்தை வெறும் 100 மணி நேரத்தில் அமைத்துள்ளனர்.
எந்தவொரு நாடு வேகமாக வளரவும் அந்நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம். குறிப்பாக நகரங்களுக்கு இடையே நல்ல சாலைகள் இருக்க வேண்டும்.
சரக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் குறைந்த செலவிலும் வேகமாகவும் எடுத்துச் செல்ல சாலைகளே சிறந்த வழியாக இருக்கிறது. இதனால் காரணமாகவே அனைத்து அரசுகளும் சாலை உட்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் தருகிறது.

எக்ஸ்பிரஸ் சாலை: நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலை உட்கட்டமைப்பு திட்டங்கள் போடப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடியைச் செலவழித்து வருகிறது. இது அந்த நகரங்களில் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இப்படி இந்தியா முழுக்க பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இப்போது சாலைகளை அமைப்பதில் புதிய சாதனையைப் படைத்துள்ளனர். அதாவது காசியாபாத்-அலிகார் விரைவுச்சாலையில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு பிட்மினஸ் கான்கிரீட்டை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறும் 100 மணிநேரத்தில் அமைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

அமைச்சர் நிதின் கட்கரி: இந்த சாதனை இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு துறையின் அர்ப்பணிப்பு மற்றும் புத்திக் கூர்மையை எடுத்துக் காட்டுவதாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் நடந்த விழாவில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "தேசிய நெடுஞ்சாலை 34இல் காசியாபாத்-அலிகார் பகுதிகளை இணைக்கும் 118 கிலோமீட்டர் சாலை அப்பகுதியின் போக்குவரத்திற்கு முக்கியமானது.
இந்த திட்டம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாத்ரி, கவுதம் புத்த நகர், சிக்கந்திராபாத், புலந்த்ஷாஹர் மற்றும் குர்ஜா உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் கடந்து செல்கிறது. தொழில்துறை பகுதிகள், விவசாய பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்த சாலை இணைக்கிறது. முக்கிய நகரங்களை இணைப்பதன் மூலம் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது எளிதாகுகிறது. மேலும், இது பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், இந்த சாலையை நாங்கள் பசுமை தொழில்நுட்பம் மூலம் அமைத்துள்ளோம்.. அதாவது இதில் 90 சதவீதம் வரை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தி இருக்கிறோம். அதாவது சுமார் 20 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய பொருட்களின் பயன்பாட்டை வெறும் 10 சதவீதமாக குறைத்துள்ளோம்.
இந்த முறையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், செலவு கணிசமாக குறைந்துள்ளது. மேலும், இப்போது பருவநிலை மாற்றம் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயு வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வளவு குறைந்த நேரத்தில் 100 கிமீ-க்கு சாலை அமைக்கவே முடியாது என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், சரியான திட்டமிடல் மூலம் சாதித்து காட்டியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுக்க இப்படி பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை பெங்களூரை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலை திட்டமும் படுவேமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications