''குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை'.. சொந்த ஊரில் ராம்நாத் கோவிந்த் உருக்கம்!
லக்னோ: குடியரசுத் தலைவர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை என குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பரன்க் கிராமத்துக்கு சென்றுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இருந்து கான்பூருக்கு அவர் சிறப்பு ரயில் மூலம் சென்றடைந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பிறகு ரயில் சென்ற குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

சொந்த ஊரில் குடியரசுத் தலைவர்
கான்பூரில் இருந்து பரன்க் கிராமத்துக்கு சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்தை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். தான் பிறந்த ஊருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பரன்க் கிராம மண்ணை தொட்டு வணங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பால்ய நண்பரை சந்தித்தார்
தனது கிராம மக்களை சந்தித்த அவர், தனது பால்ய நண்பர் வீட்டுக்கும் சென்றார். இதனை தொடர்ந்து பரன்க் கிராமத்தில் மக்களிடேயே உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:- என்னைப் போன்ற ஒரு சாதாரண கிராம சிறுவனுக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் மரியாதை கிடைக்கும் என்று என கனவுகளில் கூட நான் நினைத்ததில்லை. ஆனால் நமது ஜனநாயக அமைப்பு இதை சாத்தியமாக்கியது.

கிராம மக்களுக்கு நன்றி
இதற்காக நான் பிறந்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் இன்று எங்கு சென்றாலும், , உங்கள் அன்பும், ஆசீர்வாதங்களுக்கும் எனக்கு கிடைக்கிறது. இந்த அற்புதமான நாளில் தேசத்தின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட வீரர்கள், நம்முடைய சுதந்திரமான அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களை நினைவு கூறுகிறேன்.

இதுதான் தாய்நாடு
என்னைப் பொறுத்தவரை பரன்க் ஒரு கிராமம் மட்டுமல்ல,. இது எனது தாய்நாடு. இங்கு இருந்து நாட்டுக்கு சேவை செய்ய எனக்கு உத்வேகம் கிடைக்கிறது. இந்த உத்வேகம் என்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் முதல் மாநிலங்களவை வரை சென்றடையச் செய்துள்ளது. மாநிலங்களவையில் இருந்து நான் ராஜ் பவனுக்கும், அங்கிருந்து ராஷ்டிரபதி பவனுக்கும் சென்றேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications