கொடுமை.. கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு விநியோகம்.. உ.பி.யில் அலட்சியம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் மாநில கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் வைத்து உணவு வழங்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ தீயாய் பரவி வருகிறது. நாட்டுக்காக விளையாடும் வீரர்களை இப்படியாக நடத்துவது என உ.பி. அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் மாநில கபடி போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு அந்த மாநில விளையாட்டுத் துறை ஆணையம் சார்பில் உணவு, தங்குமிடம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்.
இவர்கள் நாட்டிற்காக விளையாடி வரும் மாநில வீரர்களாவர். ஒவ்வொரு துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருவதாக அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள், நாட்டிலும் ஆண் , பெண் ஏற்றத்தாழ்வுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

பெண்கள்
ஆனாலும் இன்று வரை பெண்கள் சரியான முறையில் மரியாதையாக நடத்தப்படுவதில்லை என்பது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. நாட்டிற்காக விளையாடும் கபடி வீரர்களுக்காக கழிப்பறையில் வைத்து உணவு கொடுக்கப்படும் கொடுமை உ.பி.யில் நடந்துள்ளது. இந்த வீடியோவில் 200-க்கும் மேற்பட்ட கபாடி வீரர்களுக்கு கழிப்பறை முன்பு வைத்து சாதம் தயார் செய்யப்படும் அவலமும் நடக்கிறது.

கபடி போட்டிகள்
இந்த மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கின. இதில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் 17 வயதுக்குள்பட்டவர்களாவர். அந்த கழிப்பறையில் தரையில் ஒரு பேப்பரை போட்டு அதில் வட்டமாக ஒரு ஸ்னாக்ஸ் வைத்துள்ளார்கள். பார்ப்பதற்கு பூரி போல் உள்ளது. சாதத்தையும் அப்படியே திறந்தபடியே கழிப்பறையில் கொட்டி வைத்துள்ளார்கள். இந்த வீடியோவில் உணவை வாங்க வந்தவர்கள் வீராங்கனைகளாவர்.

உணவு
வீரர்களுக்கு வேறு இடத்தில் உணவு வழங்கப்படுகிறதா என தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவில் வரும் ஆண்கள் சிலர் உணவை கொடுப்பது, பாத்திரங்களை எடுத்து செல்லும் பணிகளில் உள்ளனர். அவர்கள் பார்ப்பதற்கு கபடி வீரர்கள் போல் தெரியவில்லை. கழிவறையில் உணவு விநியோகம் குறித்து சஹாரன்பூர் விளையாட்டு துறை அதிகாரி அனிமேஷ் சாக்சேனாவிடம் கேட்ட போது அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

விளையாட்டு வீரர்கள்
நாங்கள் விளையாட்டு வீரர்களளுக்கு கீரை, காய்கறிகள் அடங்கிய தரமான உணவையே கொடுத்து வருகிறோம். எந்த உணவாக இருந்தால் அவை பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டு நீச்சல் குளம் அருகே வழங்கி வருகிறோம் என்றார். இந்த வீடியோ வைரலானதும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் இடபற்றாக்குறையால் இப்படி கழிப்பறையில் வைத்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அம்பேத்கர்
இந்த மைதானத்தின் பெயர் அம்பேத்கர் மைதானம் என்பது கூடுதல் தகவல். கழிவறையில் வைக்கப்பட்டு வழங்கப்படும் உணவால் கபடி வீராங்கனைகளின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது? உ.பி. அரசா, மாவட்ட நிர்வாகமா, சமையல் செய்தவரா என்ற சுளீர் கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications