36 மணி நேரத்திற்கு பின்.. பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வ கைது.. தற்காலிக சிறையாக்கப்பட்ட அரசு விடுதி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தற்போது அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இரண்டு பிரிவுகளில் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நாட்டையே உலுக்கி உள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராடிய விவசாயிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிசின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம்
மொத்தமாக இதுவரை போராட்டத்தில் 4 விவசாயிகள், 1 செய்தியாளர், பொதுமக்கள் உட்பட 9 பேர் பலியானதாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை அடுத்து மொத்த தேசமும் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தை உற்றுநோக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மீது எப்ஐஆர் மட்டுமே பதியப்பட்டுள்ளது.

கைது
இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு டெல்லியில் இருந்து விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் புறப்பட்ட பிரியங்கா காந்தி போலீசாரால் லக்னோவில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அங்கிருந்து தப்பித்து கார் மூலம் லக்கிம்பூர் எல்லை வரை சென்ற பிரியங்கா காந்தி போலீசார் மூலம் மீண்டும் தடுக்கப்பட்டு சிதாபூர் என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டார். நேற்று முதல் நாள் இரவு இவர் ஆண் போலீசார் மூலம் எப்ஐஆர் இன்றி தடுக்கப்பட்டார்.

கேள்வி
எந்த விதியின் அடைப்படையில் இவர் இரவு முழுக்க விடுதியில் தங்க வைக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சியினர் , அரசியல் விமர்சகர்கள் ஆகியோர் போலீசாரின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது குறித்து ட்வீட் செய்த பிரியங்கா காந்தி, மோடி சார், உங்களுடைய அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக கஸ்டடியில் வைத்து இருக்கிறது.எந்த உத்தரவும், எப்ஐஆரும் இன்றி என்னை கஸ்டடியில் வைத்து இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை யாருமே இன்னும் கைது செய்யவில்லை.. ஏன் என்று சொல்லுங்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
Recommended Video

அதிகாரபூர்வம்
இந்த நிலையில்தான் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தற்போது அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார். 36 மணி நேரம் கழித்து இவர் அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது 151, 107 ஆகிய இரண்டு பிரிவுகளில் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இவர் போக இன்னும் 10 பேர் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

எப்ஐஆர்
பிரியங்கா காந்தி தங்கி இருக்கும் அரசு விடுதி தற்காலிக சிறையாக்கப்பட்டுள்ளது. எப்ஐஆர் அடிப்படையில் இவர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முறையான அனுமதி இன்றி பிரியங்கா காந்தியை அடைத்து வைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில்தான் இவர் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications