ஸ்வீப்! உபி, குஜராத்தில் சாதிக்கும் பாஜக! ‛இந்தியா’ கூட்டணிக்கு அடி! லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு
லக்னோ: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ‛‛இந்தியா'' கூட்டணியை பின்னுக்கு தள்ளி பாஜகவின் என்டிஏ கூட்டணி மொத்தமாக ‛ஸ்வீப்' செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவை எப்படியாவது இந்த தேர்தலில் வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் பாகுபாடுகளை மறந்து அவர்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அதற்கான பணிகளை கட்சிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றினால் மத்தியில் ஆட்சியமைப்பது சுலபமாகி விடும்.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இருமாநிலங்களிலும் பாஜக ஸ்வீப் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பாஜக 26 இடங்களையும் கைப்பற்றும். அதேவேளையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தட்டில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 68 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் பாஜகவின் கோட்டையாக உத்தர பிரதேசம் மாறலாம்.மாறாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 12 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications