வரதட்சணைப் பிரச்சினை.. மனைவியின் நாக்கை வெட்டி வீட்டுக் காவலில் வைத்த கணவர்!
வரதட்சணைப் பிரச்சினையால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோ: வரதட்சணை கேட்டபோது எதிர்த்துப் பேசியதற்காக, மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கெதிரான பிரச்சினைகளில் வரதட்சணைக் கொடுமையும் முக்கியமான ஒன்று. இதற்கெதிராக பல்வேறு சட்டதிட்டங்கள் உள்ள போதும், படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமல்ல நன்கு படித்த பலருமே இது போன்ற வரதட்சணைக் கொடுமை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணைப் பிரச்சினை காரணமாக மனைவியின் நாக்கை கணவரே வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமான நாள் முதல் தன் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அவரது மனைவி, கடந்த 6ம் தேதி ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தன்னை எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்து விடாமல் இருக்க, அவரை வீட்டில் வைத்துப் பூட்டியுள்ளார். ஒருவழியாக ஆகாஷிடம் இருந்து தப்பி வந்த அவரது மனைவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் ஆகாஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப் படுத்தியுள்ளனர். காரணம் ஆகாஷின் தந்தையும் ஒரு போலீஸ் அதிகாரி தான். இதனால் இந்த விவகாரத்தை அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.