உ.பி. போலீஸ் ஸ்டேஷன் அருகே 21 வயது பெண் சுட்டுக் கொலை.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், கொடூர கொலைகள், ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்மங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால்தான் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என முன்னாள் முதல்வர்களான மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பிரபல தாதா அத்திக் அகமது போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இநத் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மர்மநபர்கள் அத்திக் அகமதுவை சுட்டுக் கொன்ற போது போலீஸார் அந்த மர்ம நபர்களை சுட்டு பிடிக்காதது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆன நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் விதமாக இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்றைய தினம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு பலியாகிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. இந்த பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் சரிந்து விழுந்ததும் இருவரும் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். விசாரணை அந்த பெண்ணின் பெயர் ரோஷினி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரோஷினியின் குடும்பத்தினர் கூறுகையில் எங்கள் வீட்டு பெண்ணுக்கு தெரிந்த நபர்கள்தான் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்க கூடும் என்றனர். இதை வைத்து போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ராஜீ என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணுடன் தான் காதலில் இருந்து வந்ததாக தெரிவித்தார்.
மேலும் தனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன்னை அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், ரோஷினியை சமாதானப்படுத்த அவருடன் பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண்ணோ பேச மறுத்துள்ளார். இப்படித்தான் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த அந்த பெண்ணை வழிமறித்து ராஜீ பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண் மீண்டும் பேச மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்ததால் தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜீவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications