'பரபரப்பு..' உபி வன்முறையில் செய்தியாளரை அடித்து கொன்றது விவசாயிகளா? சகோதரர் தரும் முக்கிய விளக்கம்
லக்னோ: உபி வன்முறையில் மத்திய அமைச்சரின் கார் மோதி செய்தியாளர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் விவசாயிகள் தான் அவரை அடித்துக் கொன்றார்கள் என்று கூறச் சொல்லி சில செய்தியாளர்கள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அச்செய்தியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சருக்கு எதிராகக் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர். போராட்டத்தை முடித்துக் கொண்டு விவசாயிகள் அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் மின்னல் வேகத்தில் வந்த அமைச்சரின் 3 எஸ்யுவி கார்கள் விவசாயிகள் கூட்டத்தில் மோதியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளம்பியிருந்தது.

8 பேர் பலி
இந்த விபத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய காரை அமைச்சரின் மகன் ஓட்டி வந்ததாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை.

செய்தியாளர்
இந்தச் சம்பவத்தில் பத்திரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார். அமைச்சரின் கார் மோதியே செய்தியாளர் உயிரிழந்திருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தான் அவரை அடித்துக் கொன்றார்கள் என்று கூறச் சொல்லி சில செய்தியாளர்கள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அச்செய்தியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அழுத்தம் தருகிறார்கள்
இது குறித்து உயிரிழந்த அந்த செய்தியாளரின் சகோதரர் பவன் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மத்திய அமைச்சரின் (அஜய் மிஸ்ரா) வாகனத்தில் மோதியே எனது சகோதரர் உயிரிழந்தார். இதைத் தான் நானும் எனது தந்தையும் தொடக்கம் முதல் கூறி வருகிறோம். ஆனால் பல பத்திரிகையாளர்கள் இப்போது விவசாயிகள் அவரை அடித்துக் கொன்றார்கள் என்று கூற சொல்லி எங்களுக்கு அழுத்தம் தருகிறார்கள். ஆனால் ஒருபோதும் அப்படி நடக்காது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வரும் முன் பல கதைகளைக் கிளப்பி விடுகின்றனர்" என்று தெரிவித்தார்.

வீடியோ
முன்னதாக இந்த விபத்து குறித்தும் செய்தியாளர்கள் தங்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் உயிரிழந்த அந்த செய்தியாளரின் சகோதரர் பவன் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியிருந்தது. அதில் அவர், "பல செய்தியாளர்கள் இதை வைத்து இதில் அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் வந்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தடியால் தாக்கியதால் ஏற்பட்ட காயத்திலேயே செய்தியாளர் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனை முடிவுகள் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

கற்பனை கதைகள்
கற்பனை கதைகளை கட்டவிழுத்துவிடும் அவரிடம் நான் வாக்குவாதம் செய்யவே எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.. பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள். நான் பிணவறைக்குச் சென்றேன். அங்கு எனது சகோதரருக்கு ஏற்பட்ட காயத்தை நான் பார்த்தேன். அது தடியால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் இல்லை. வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை எல்லாம் வைத்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்" என்று அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications