மும்பையில் இருந்து 1500 கி.மீ.. 14 நாட்கள் நடைபயணம்... நடுவழியிலேயே மரணித்த கூலி தொழிலாளி
லக்னோ: மும்பையில் இருந்து 14 நாட்கள் நடைபயணமாக நடந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சென்ற நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பாகவே நடுவழியில் கூலித் தொழிலாளி ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுனால் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் பல லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர். இவர்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த கிராமத்துக்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர்கள் ஏராளம்.

இதற்காக கால்நடையாகவே பல வாரங்கள் பயணித்து வீடுகளைச் சென்றடைந்தவர்களும் உண்டு; நடுவழியில் மாண்டுபோனவர்களும் உண்டு. அப்படி மாண்டு போனவர்களில் ஒருவர்தான் இன்சாப் அலி.
மும்பையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் இன்சாப் அலி. லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் கையில் ரூ5,000 பணத்துடன் செல்போனை நம்பி தமது நடைபயணத்தை தொடங்கினார் இன்சாப். கையில் செல்போன், பிஸ்கட்டுகளுடன் 1500 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேசத்தின் சரவாஸ்தி நகரை நோக்கி இன்சாப் பயணத்தை தொடங்கினார்.
வரும் வழியில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தபடியே இன்சாப் அலியின் பயணம் தொடர்ந்தது. 14 நாட்கள் தொடர்ந்த இந்த பயணம் உத்தரப்பிரதேசத்துக்குள்ளும் நீடித்தது.
தமது சொந்த கிராமத்தை எட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் பயணத்தை இன்சாப் தொடர்ந்த போது போலீசாரிடம் சிக்கினார் அவர். பின்னர் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணித்துப் போனார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications