ஹோலி பண்டிகை.. திடீரென தார்ப்பாயால் மறைக்கப்படும் மசூதிகள்.. என்ன நடக்குது உபியில்? பின்னணி
உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளும் தார்ப்பாய்களாலும், பெரிய திரைச்சீலைகளாலும் மூடப்பட்டு வருகின்றன.
லக்னோ: ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய மசூதிகள் பெரிய திரைச்சீலைகளாலும், தார்ப்பாய்களாலும் மறைக்கப்பட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சில விரும்பத்தகாத செயல்களையும், அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வண்ணங்களின் திருவிழா
இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து பண்டிகையாக விளங்கும் ஹோலி நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை காட்டிலும் இரண்டு மடங்கு உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் ஹோலி பண்டிகை அங்கு கொண்டாடப்படும். தென் மாநிலங்களில் ஆங்காங்கே வட மாநிலத்தவர் இருக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை பார்த்திருப்போம். தீபங்களின் திருவிழா தீபாவளி என்றால், ஹோலி வண்ணங்களின் திருவிழா. இந்த பண்டிகையில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பூச்சுகளை பூசுவதும், வண்ணப்பொடிகள் கலக்கப்பட்ட தண்ணீரை ஊற்றுவதுமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

மதக் கலவரங்களுக்கும் வாய்ப்பு
ஹோலி இத்தனை மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் போதிலும், சில நேரங்களில் மதவெறியர்களால் பெரும் கலவரமும், அசம்பாவிதங்களும் நிகழ்வதுண்டு. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைப்பதற்கே பண்டிகை என்பதை மறந்து, வேற்று மதத்தினர் மீது தங்களுக்கு இருக்கும் ஆத்திரத்தை காட்டுவதற்கும், அவர்களை பழிவாங்குவதற்கும் பண்டிகைகளை சில குறுகிய புத்திக் கொண்டவர்கள் பயன்படுத்துவதுதான் இதற்கு காரணம்.

விஷமிகள் சேட்டை
இதற்கு ஹோலி பண்டிகையும் விதிவிலக்கு அல்ல. கடந்த காலங்களில் உத்தரபிரதேசத்தில் பல பகுதிகளில் ஹோலி பண்டிகையின் போது இரு வேறு மதத்தினருக்கு இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி வாங்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, ஹோலி பண்டிகையில் நடைபெறும் ஊர்வலங்களில் மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் மீது வேண்டுமென்றே வண்ணங்களை பூசுவது, அழிக்க முடியாத வண்ணப்பூச்சுகளை கலந்த தண்ணீரை ஊற்றுவது என சில விஷமிகள் வேலையை காட்டுவது வழக்கம். இதுவும் பெரும் மதக்கலவரங்களுக்கு காரணமாகி இருக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்நிலையில், இதனை தவிர்க்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மசூதி நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் உள்ள புகழ்பெற்ற மசூதி ஒன்று பெரிய தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. அதேபோல, உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளும் தார்ப்பாய்களாலும், பெரிய திரைச்சீலைகளாலும் மூடப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் மற்ற சில மாநிலங்களில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மசூதி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications