முஸ்லிம் பெண்கள் குங்குமம் வைப்பார்கள், ஹிஜாபுகள் பறக்கும்.. நான் மீண்டும் ஜெயித்தால்: பாஜக எம்எல்ஏ
முஸ்லிம் பெண்கள் பொட்டு வைப்பார்கள் என்று சர்ச்சை பேச்சு எழுந்துள்ளது
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் இன்னொரு பரபரப்பாக பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் முஸ்லிம் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பார்கள் என்று பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார். இவரது பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக வடமாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், வெறுப்பை உமிழ்வதும் அதிகமாக நடக்கும்.. அதிலும் தேர்தல் சமயங்களில் இது அளவுக்கு அதிகமாகவே எல்லை மீறிவிடும்.
மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு
இந்த முறையும் அப்படித்தான்.. குறிப்பாக உபியில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதும், அவர்களின் உணர்வுகளை தூண்டிவிடுவதும் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
துறவி சர்ச்சை
சில நாட்களுக்கு முன்பு ஒரு சாமியார் பேட்டி தந்தார்.. அவர் காஸியாபாத் மாவட்டம் டாஸ்னாவில் உள்ள தேவி கோவிலின் பீடாதிபதி ஆவார்.. அந்த துறவி பெயர் யதி நரசிங்கானந்த்.. "இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உலகிலிருந்தே ஒழிக்க வேண்டும், இஸ்லாமியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் முற்காலத்தில் ராட்சசர்கள் ஆவார்கள்" என்றார் இவர்.
வெறுப்பு பிரச்சாரம்
இப்படி ஒரு வெறுப்பு பிரச்சாரம் அன்றே துவங்கப்பட்டும், இந்த சாமியார் மீது இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.. சிஏஏவிற்கு எதிராக ட்வீட் செய்ததற்காக, புகார் தந்ததற்காக, போஸ்டர்களை ஒட்டியதற்காக எத்தனையோ பேரை முதல்வர் யோகி கைது செய்தாரே, ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்ட இந்த துறவியை ஏன் கைது செய்யவில்லை என்று அப்போதே பல கேள்விகள் எழுந்தன.
சட்டமன்ற தேர்தல்
தற்போது உபியில் சட்டமன்ற தேர்தல்கள் ஒவ்வொரு கட்டமாக நடந்து கொண்டிருக்கின்றது.. பாஜக, சமாஜ்வாடிக் கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸும் தன்னால் முடிந்த அளவுக்கு டஃப் கொடுத்து வருகிறது... ஏற்கனவே கர்நாடக ஹிஜாப் பிரச்சினையை வைத்து இங்கும் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு பாஜக எம்எல்ஏ பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ஹாட் டாப்பிக்
அவரது பெயர் ராகவேந்திர சிங். டோமரியாஞ்ச் என்ற சட்டசபைத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கிழக்கு உ.பியில் இது வருகிறது.. அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோதான் இப்போது ஹாட்டாக பேசப்படுகிறது. அந்த வீடியோவில் ராகவேந்திர சிங் பேசியுள்ளதாவது: மறுபடியும் பாஜக ஆட்சியை பிடித்தால், இங்குள்ள இஸ்லாமிய பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு இருந்தபோது அவர்கள் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி தலையில் முக்காடு போட வைத்தனர்...
ஹிஜாப்
அதேபோல நாங்களும் செய்வோம்... இந்து பெருமைக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். முஸ்லிம்கள் என்னை தோற்கடிக்க முயற்சி செய்தால் நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். மீண்டும் நான் எம்எல்ஏவாக வந்தால், அவர்களது ஹிஜாப் பறந்து போய் விடும். அடுத்த முறை அவர்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வார்கள். முதல் முறையாக இந்தத் தொகுதியில் நிறைய இந்துக்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதியில் ஒலிக்கப் போவது சலாமா அல்லது ஜெய்ஸ்ரீமா என்பதைப் பார்த்து விடுவோம்" என்று அவர் பேசியுள்ளார்.
பரபரப்பு
இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் உடனடியாக அந்த எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத ரீதியாக மக்களிடையே பிரச்சினை உண்டாக்கும் நோக்கில் பேசியதாக அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த எம்எல்ஏ கடந்த 2017ம் ஆண்டு இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றபோது வெறும் 200 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் 6வது கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.