உ.பி.யில் அட்டூழியம்- தலித் மாணவிகளின் உடைகளை களைந்து ஆதிக்க ஜாதி மாணவிகளுக்கு கொடுத்த ஆசிரியர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதிக்க ஜாதி மாணவிகள் போட்டோ எடுக்க தலித் மாணவிகள் இருவரின் உடைகளை களைந்து ஆசிரியர்கள் கொடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜாதிய ஆதிக்கமும் ஜாதிய வன்முறைகளும் தலைவிரித்தாடும் வட இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. இம்மாநிலத்தின் ஹபூர் பகுதியில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சம்பவமானது நாட்டையே கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹபூர் பள்ளியில் ஜூலை 11-ந் தேதி மாணவிகளை ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது 4-ம் வகுப்பு படித்த தலித் மாணவிகள் இருவரின் உடைகளை களைந்து அந்த மாணவிகளின் சீருடைகளை ஆதிக்க ஜாதி மாணவிகளுக்கு கொடுத்து போடச் சொல்லி இருக்கின்றனர் ஆசிரியர்கள். இந்த கொடுமை குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார்
எடுக்கவில்லை. அதற்கு மாறாக அரசு அதிகாரிகளால் 2 ஆசிரியர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சோஷித்கிராந்தி தள் என்ற அரசுசாரா அமைப்பு சமூக வலைதளங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், நாங்கள் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் முதல் தகவல் அறிக்கையை கூட போலீசார் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை அனைத்து தரப்புமே மூடி மறைக்கத்தான் பார்க்கிறது. எங்களையும் இது குறித்து பேசக் கூடாது என மிரட்டுகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.
தற்போது இந்த் விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications