உ.பி.: மாயாவதியின் தலித் வாக்கு வங்கிக்கு வேட்டு- பீகார், மகா. கூட்டணி கட்சிகளை களமிறக்கும் பா.ஜ.க
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கான தலித் வாக்குகளை சிதறடிப்பதற்காக பீகார், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலித் கட்சிகள், உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜகவால் களமிறக்கப்படுகின்றன.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் படுமுனைப்புடன் தேர்தல் பணிகளில் குதித்துள்ளன. மாநில கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் களத்துக்கு வருகிறது. ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
இவை அல்லாமல் பீகார் மாநில அரசியல் கட்சிகளும் உத்தரப்பிரதேச தேர்தல் களத்துக்கு வந்துள்ளன. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி.). இக்கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி, பீகார் அமைச்சராகவும் உள்ளார். இவரது வி.ஐ.பி. கட்சி உத்தரப்பிரதேச தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளது.

உ.பி. தேர்தலில் பூலான் தேவி
உத்தரப்பிரதேசத்தில் மீனவர்களான நிஷாந்த் சமூகத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சஹானி. இதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான் சுட்டுக் கொல்லப்பட்ட பூலான்தேவி. ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி என அழைக்கப்பட்டவர் பூலான்தேவி. பின்னர் போலீசில் சரணடைந்து சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி அரசியலுக்கும் வந்தார். சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாக இருந்த போது டெல்லியில் பூலான்தேவி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்போது உ.பி. தேர்தல் நடைபெறும் நிலையில் நிஷாந்த் சமூக வாக்குகளை அறுவடைய செய்ய பூலான்தேவி சிலைகளை வைப்போம் என அரசியல் செய்து வருகிறார் முகேஷ் சஹானி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூலான் தேவி சிலை திறக்க வந்த முகேஷ் சஹானியை வாரணாசி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது உ.பி. அரசு.

160 சீட் கேட்கும் கூட்டணி கட்சி
இதேபோல் பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான நிஷாந்த் கட்சியும் துணை முதல்வர் பதவியையும் 160 தொகுதிகளையும் கேட்டு வருகிறது. தங்களது கோரிக்கையை பாஜக மேலிடம் ஏற்காமல் போனால் தனித்து போட்டியிடுவோம் என நிஷாந்த் கட்சி மிரட்டிக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், பாஜக பிராமணர்களுக்கு எதிரான கட்சி; தலித்துகளுக்கு எதிரான கட்சி என்று படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி.

பாஜகவின் இந்துத்துவா பிரசாரம்
இத்தனையையும் சமாளிக்கும் வகையில் தீவிரமான இந்துத்துவா பிரசாரத்தை உ.பி. தேர்தல் களத்தில் பேசுகிறது பாஜக. அண்மையில் உ.பி.யில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்துத்துவா கோட்பாட்டை அழுத்தம் திருத்தமாக உரத்துப் பேசியிருந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச தேர்தல் களத்துக்கு பாஜக புதிய வியூகத்தை இறக்குமதி செய்திருக்கிறது. மாயாவதி கட்சி பிராமணர் பிளஸ் தலித்துகள் வாக்குகளை குறிவைத்து தீவிரமாக இறங்கி இருப்பதற்கு பதிலடி தரும் வகையில் பாஜகவின் வியூகம் உள்ளது.

உ.பி. தலித் வாக்குகள்
உ.பி.யில் 21.5% உள்ள தலித் வாக்குகளில் கணிசமாக மாயாவதி கட்சிக்கு கடந்த காலங்களில் கிடைத்து வந்தன. இந்த தலித் வாக்குகள் அண்மைக்காலமாக பாஜக பக்கம் திரும்பி இருக்கிறது. இதனை சமன்செய்யவே பிராமணர் பிளஸ் தலித்துகள் கூட்டணி என்ற முழக்கத்தை முன்வைக்கிறார் மாயாவதி. உ.பி.யில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் 83 தலித்துகளுக்கான ரிசர்வ் தொகுதிகள். இப்போது மாயாவதி கட்சிக்கு கிடைக்கலாம் என எதிபார்க்கப்படும் எச்ச சொச்ச தலித் வாக்குகளையும் சிதறடிக்கும் வகையில் பீகார், மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி ஆகியவற்றை உ.பி. தேர்தல் களத்துக்கு கொண்டு வந்திருக்கிறது பா.ஜ.க.

கூட்டணி கட்சிகள்
பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகனும் பீகார் அமைச்சருமான சந்தோஷ் மஞ்சி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அண்மையில் சந்தித்து பேசினார். மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்தபடியே உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் கணிசமான செல்வாக்கு கொண்டது ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே பிரிவு). ராம்தாஸ் அத்வாலேவும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். அத்வாலேவின் குடியரசு கட்சியும் உ.பி. தேர்தலில் பாஜக தலைமையிலான அணியில் போட்டியிட உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கான அஜெண்டாவே, தலித்துகள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதுதான். இதன் முதல் கட்டமாக செப்டம்பர் 26-ந் தேதி முதல் பகுஜன் சமாஜ் கல்யாண் யாத்திரையை அத்வாலே லக்னோவில் தொடங்குகிறார். இந்த யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தலித் வாக்குகள் முக்கியம்
பீகார் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த சந்தோஷ் மஞ்சி, தலித் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் வகையில் உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம். முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பீகாரில் எங்களுடைய கட்சி எப்படி செயல்பட்டு வருகிறது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இன்னும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக ஜிதன்ராம் மஞ்சி முடிவு செய்வார் என்றார்.

ஆசாத்தின் பீம் ஆர்மி
ஏற்கனவே உ.பி. தேர்தல் களத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி, தலித்துகள் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. சந்திரசேகர் ஆசாத்துக்கு தலித் இளைஞர்களிடையே ஆதரவு இருக்கிறது. அவரால் மாயாவதிக்கு கிடைக்கும் தலித் வாக்குகள் பிரியும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இந்த நிலையில் தம் பங்குக்கு பாஜகவும் தலித் வாக்குகளை மொத்தமாக அள்ள வியூகம் வகுத்து கூட்டணி கட்சிகளை முழுவீச்சில் களமிறக்கி இருப்பது உ.பி. தேர்தல் களத்தை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications