புதிய கல்விக்கொள்கை “சமஸ்கிருதம்” போன்ற மொழிகளை ஊக்குவிக்கும்.. நாடு முன்னேறும் - மோடி நம்பிக்கை
லக்னோ: புதிய கல்விக்கொள்கையால் சமஸ்கிருதம் போன்ற பழமையான மொழிகளுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா திட்டத்தையையும் அவர் தொடங்கி வைத்தார்.

புதிய கல்விக்கொள்கை
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய கல்விக்கொள்கை குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனைகளில் இருந்து கல்வியை மீட்பதற்கு உதவும். புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கமே இதுதான். 21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான புதிய சிந்தனைகளை கொண்டதாக புதிய தேசிய கல்விக்கொள்கை இருக்கும்.

நாட்டை முன்னேற்றும்
இந்த கல்விக்கொள்கை மாணவர்களை வெறும் பட்டப்படிப்புக்கு தயார் செய்வதோடு மட்டும் நின்றுவிடாது. மனித வளங்களை வைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் அடிப்படையிலேயே இந்த புதிய கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய தாய் மொழிகளில் கல்வியை கற்பதற்கான வாய்ப்பை புதிய தேசியக் கல்விக் கொள்கை வழங்குகிறது.

சமஸ்கிருதம்
இது சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மையான மொழிகளுக்கு ஊக்கம் அளிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கை மாற்றி அமைக்கும்." என்றார். மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறது.

கடும் எதிர்ப்பு
ஆனால், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக்கொள்கை, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, சிறுவயதிலேயே தொழிற்பயிற்சி வழங்குவது தேசியமயமான கல்விக்கொள்கை போன்றவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியானவுடன் அதன் மீதான எதிர்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

மாநில கல்விக்கொள்கை
குறிப்பாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புதிய தேசிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்தனர். இது இந்தியை திணிப்பதாகவும், மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிப்பதாக குற்றம்சாட்டின. ஆட்சிக்கு வந்தபிறகும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் திமுக மாநிலக் கல்விக்கொள்கையை தயாரிக்க குழுவையும் அமைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications