பிரியங்கா, சந்திரசேகர் ஆசாத், ஜெயந்த் சவுத்ரி, ஆதித்யா யாதவ்- உ.பி. சட்டசபை தேர்தலில் புதுமுகங்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களம் பரபரக்க தொடங்கி உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என பிரதான அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி, சந்திரசேகர் ஆசாத் என பல புதுமுகங்களும் முட்டி மோதுகின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க, பாஜக) ஆட்சியைத் தக்க வைப்பதில் படுமுனைப்பாக உள்ளது. இந்த முறையும் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது அக்கட்சியின் இலக்கு.
அதேநேரத்தில் பா.ஜ.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தீவிரம் காட்டுகிறது. ஆளும் பா.ஜ.க. மீது அதிருப்தியில் உள்ள பிராமணர் வாக்குகளுக்கு குறிவைத்து மாநாடுகள், வாக்குறுதிகளை சமாஜ்வாதி கட்சி முன்வைத்து வருகிறது.
ராமரை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேச காங்கிரஸ்...ஒதுங்கிய டெல்லி!!
பிரியங்கா காந்தி
இதேபாணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் பிராமணர், சிறுபான்மையினர், தலித்துகள் வாக்குகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்துள்ளன. பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி உ.பி. தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால் பிரியங்கா காந்தி சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
அஜித்சிங் மகன்
உ.பி. தேர்தல் களத்துக்கு வரும் மற்றொரு புதுமுகம் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி. கொரோனாவால் காலமான மூத்த அரசியல் தலைவர் அஜித்சிங்கின் மகன். அதாவது முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன். 2009-2014-ல் மதுரா தொகுதி எம்.பி.யாக இருந்தவர். அஜித்சிங் இல்லாத நிலையில் முதல் முறையாக சட்டசபை தேர்தல் களத்தை எதிர்கொள்கிறார் ஜெயந்த் சவுத்ரி. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தங்களுக்கு கை கொடுக்கும் என்பது ஜெயந்த் சவுத்ரியின் நம்பிக்கை. தம்முடைய ஜாட் சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்து களம் காண்கிறார் ஜெயந்த் சவுத்ரி.
புதுமுகம் ஆதித்யா
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களத்துக்கு வரப்போகும் புதுமுகங்களில் ஒருவர் ஆதித்யா யாதவ். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான சிவ்பால் யாதவின் மகன்தான் இந்த ஆதித்யா யாதவ். முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். சிவ்பால் யாதவின் ஜஸ்வந்த்நகர் தொகுதியிலேயே ஆதித்யா யாதவ் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்
அதேபோல் நாடறிந்த இளம் தலித் தலைவர் பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத், ஆசாத் சமாஜ் கட்சியின் பெயரில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். ஏற்கனவே சந்திரசேகர ஆசாத் நடத்திய சைக்கிள் யாத்திரை தலித் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கான தலித் வாக்குகளை சந்திரசேகர் ஆசாத் குறிவைத்து களமிறங்குகிறார்.
பாஜகவில் எதிர்ப்பு
பாஜகவும் பல புதுமுகங்களை இந்த தேர்தலில் நிறுத்த இருக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர்களின் மகன்கள், மகள்கள் பலரும் தேர்தலில் சீட் கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு தரக் கூடாது என்கிற குரலும் இப்போதே பாஜகவில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.