கருத்துக் கணிப்புகள் பற்றி கவலையில்லை... உ.பியில் நாங்கள் தான் ஆட்சியமைப்போம்- அகிலேஷ் நம்பிக்கை
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நிராகரித்துள்ளார்.
லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பற்றி கவலையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

பாஜக அமோக வெற்றி
உத்தர பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி உள்ளது. இந்த மாநிலத்தில் மேட்ரைஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 262 முதல் 277 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பெற 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அனைத்து சேனல்களுமே பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி பெறும் இடங்கள்
சமாஜ்வாதி கட்சி கூட்டணி 2ம் இடத்தை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 119 முதல் 134 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களை சமாஜ்வாதி கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி
உத்தரபிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி 7 முதல் 15 தொகுதிகளிலும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அகிலேஷ் யாதவ்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், "கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு கிடைத்ததை காட்டட்டும், உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்"எனக் கூறினார்

பாஜக உற்சாகம்
தேர்தலுக்கு பிந்தைய அனைத்துக் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளும் பாஜகவிற்கு சாதகமாகவே உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜகவே மீண்டும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. வரும் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.












Click it and Unblock the Notifications