கடந்த 6 ஆண்டுகளில்.. ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
"உபியில் பாஜக அரசு பதவியேற்ற இந்த 6 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டன"
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் கமிட்டியினருக்கு 77 டிராக்டர்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக வளர்ச்சித் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறுவதை காண முடிகிறது. குறிப்பாக கல்வி, உள்கட்டமைப்பு, விவசாயம் ஆகிய துறைகளில் அம்மாநில அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலின் போதே முதல்வர் யோகி உறுதியளித்தார்.
அந்த வகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்களை உபி அரசு அடுத்தடுத்து அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறது. உதாரணமாக, பருவநிலை மாற்ற விளைவுகளால் விவசாயிகள் பாதிப்படைவதை தடுப்பதற்காக 'க்ளைமெட் ஸ்மார்ட்' கிராமங்கள் (Climate smart villages) என்ற திட்டத்தை உபி அரசு செயல்படுத்தி வருகிறது. மழை, புயல், கடும் வெயில் ஆகியவற்றை முன்கூட்டியே அறிவிக்க கிராமங்கள் அளவில் வானிலை ஆய்வு மையம், எந்தெந்த காலக்கட்டத்தில் என்னென்ன விளைப்பொருட்களை விளைவிக்கலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை கூற நிபுணர்கள் என பல்வேறு வசதிகள் இத்திட்டத்தின் கீழ் செய்துதரப்பட்டுள்ளன.

அந்த வகையில், கரும்பு விவசாயிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, உபியில் உள்ள கரும்பு விவசாயிகள் கமிட்டியினருக்கு 77 டிராக்டர்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "உபியில் எனது தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு, கரும்பு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கரும்புகளுக்கு சரியான கூலி கிடைக்காமல் விவசாயிகள் வாடி வந்தனர். மேலும், தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை உள்ளிட்டவற்றாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால், பாஜக அரசு பதவியேற்ற இந்த 6 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டன. விவசாயிகள் எவ்வளவு கரும்புகள் விளைவித்தாலும் அவற்றை அரசு கொள்முதல் செய்யும் சூழல் உருவாக்கப்பட்டது. அதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கே நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் இடைத்தரகர்களால் சுரண்டப்படுவதில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுவரை ரூ.51 ஆயிரம் கோடியை கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் அரசு வழங்கியிருக்கிறது. விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தியதால் கடந்த 6 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை" என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.












Click it and Unblock the Notifications