அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி! பயங்கரவாதியை தட்டி தூக்கிய போலீஸ்! பின்னணியில் பாக்.?
லக்னோ: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைக் குறிவைத்து தீவிரவாதி தாக்குதல் நடத்தச் சதி செய்த நிலையில், அத்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பயங்கரவாதியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம் இந்த தீவிரவாத செயலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அயோத்தி ராமர் கோயிலின் ராமர் பிரதிஷ்டை நிகழ்வு நடந்தது. ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுவதால் இங்குக் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட்டது. இந்த பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.
அயோத்தி ராமர் கோயில்
இதற்கிடையே அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைக் குறிவைத்து ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அது கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஃபரிதாபாத்தில் ஒரு நபரைக் குஜராத் பயங்கரவாத சிறப்புப் படை, ஃபரிதாபாத் சிறப்பு குழுவின் உதவியுடன் கைது செய்துள்ளது
கைது செய்யப்பட்ட அந்த நபர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரிடமிருந்து இரண்டு கையெறி குண்டுகளும் மீட்கப்பட்டன. ராமர் கோயிலைத் தாக்கவே அந்த நபர் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஐஎஸ்ஐ உளவு அமைப்பு
மேலும், இந்த சதிக்குப் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றும் மேலும் பல தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. பைசாபாத்தில் ஆட்டிறைச்சி கடையை நடத்தி வந்த அவர், ஆட்டோ ஓட்டுநராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது
சதித் திட்டம்
அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்காக அவர் பல முறை ராமர் கோயிலை உளவு பார்த்து இருக்கிறார். மேலும், பல முக்கிய தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பிற்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.. அவர் பைசாபாத்திலிருந்து ஃபரிதாபாத்திற்கு ரயிலில் சென்று, அங்கு ஒருவரிடம் இருந்து கையெறி குண்டுகளைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. நேரடியாக அயோத்திக்குத் திரும்பித் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டியிருந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
மத்திய உளவு அமைப்புகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் ஃபரிதாபாத் சிறப்புப் படையினரும் இணைந்து அப்துல் ரஹ்மானை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு இல்லத்தில் சோதனை செய்து இரண்டு கையெறி குண்டுகளை போலீசார் மீட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போலீசார் விசாரணை
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2ம் தேதி அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசார் அவரை குஜராத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.. மேலும், யாரிடம் இருந்து அப்துல் கையெறி குண்டுகளை வாங்கினார் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சதித் திட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications