ஓட்டு மெஷினில் தில்லு முல்லு இல்லையெனில், 180 தொகுதியில் பாஜக சுருங்கிவிடும்! பிரியங்கா காந்தி ஆருடம்
லக்னோ: ஓட்டு மெஷினில் எந்த தில்லு முல்லும் நடக்கவில்லை எனில், பாஜக இந்த முறை நிச்சயம் 180 சீட்டை தாண்டாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் பாஜக vs இந்தியா கூட்டணி என இருக்கிறது. இந்த தேர்தல் இரண்டு தரப்பினருக்குமே முக்கியமானதாகும். குறிப்பாக பாஜகவை பொறுத்த அளவில், இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற பொறுப்பை நரேந்திர மோடி பெறுவார். அதேபோல 2025ல் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம்.

மறுபுறம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸை பொறுத்த அளவில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் பல முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர். அதேபோல, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மாநிலங்கள் தற்போது கைநழுவியுள்ளன. எனவே, இந்த முறையும் ஆட்சிக்கு வரவில்லையெனில் ஒரேயடியாக கட்சியை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். அந்த சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக இந்த முறை நிச்சயம் 180 சீட்டை தாண்டாது என்று உறுதியாக கூறியிருக்கிறார்.
சஹாரன்பூரில் இன்று பரப்புரை மேற்கொண்ட போது அவர் பேசியதாவது, "400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜகவினர் கூறியிருந்தனர். எதன் அடிப்படையில் இது சொல்லப்பட்டது? அப்படி சொல்பவர்கள் ஒன்று ஜோசியராக இருக்க வேண்டும், இல்லையெனில் முன்கூட்டியே ஏதாவது தில்லுமுல்லு வேலையை பார்த்து வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்.
இப்போது நடைபெறும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு எதுவும் நடக்காது என்று உறுதியாக சொன்னால், பாஜக 180 தொகுதிகளை கூட தாண்டாது.
எங்களை பொறுத்த அளவில், நாங்கள் மக்கள் பார்வையில் தேர்தலை அணுகுகிறோம். மக்கள் பிரச்னையை மையப்படுத்திதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பாஜக பேசுகிறதா? விவசாயிகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னை பற்றி அவர்கள் பேசுகிறார்களா? மாறாக மக்களின் மனதை திசை திருப்புவதற்காக திறமையாக பேசுகிறார்கள்.
மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் பார்க்கவில்லை. சுருக்கமாக சொல்வதெனில் பிரதமர் மோடி மக்களுடனான தன்னுடைய தொடர்பை துண்டித்துவிட்டார். இந்த அரசியலை மக்கள்தான் மாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக உ.பியின் காஜியாபாத்தில் செய்தியாளர்களுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications