உ.பி காவல்துறை அலட்சியம்.. கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி தற்கொலை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பள்ளி சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், தலைநகர் லக்னோவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லையென்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் 19 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாற்றம்
தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் இந்த குற்றங்களை குறைப்பதற்கு கடுமையான நடவடிக்கை மட்டுமே போதாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் விளம்பரங்கள், சினிமாக்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
மேலும் ஆண், பெண் சமம் என்பதை குழந்தை பருவத்திலிருந்து இருபாலருக்கும் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் எனவும், இவற்றின் மூலகமாக மட்டுமேதான் இந்த குற்றங்களுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை உளவியல் மருத்துவர்களும் ஆமோதித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் இந்த உரையாடலின் போதே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி சிறுமி ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

காவல்துறையின் அலட்சியம்
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 16ம் தேதி பள்ளி சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத இருவர் சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில், இது தொடர்பான விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர். சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்த நிலையில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாதது இவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

தற்கொலை
இவ்வாறு இருக்கையில், சிறுமி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக நேற்று மற்றொரு துயர சம்பவம் இதே மாநிலத்தில் நிகழ்ந்திருந்தது. அதாவது, கல்லூரி பயிலும் 19 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications