40 நாட்களில் 6 முறை பாம்பு கடித்த விவகாரம்! இளைஞரின் பிரச்சினையை சட்டென தீர்த்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 40 நாட்களில் 6 முறை இளைஞரை பாம்பு கடித்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலையிட்டு அந்த இளைஞரின் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தில் வசிப்பவர் விகாஸ் துபே (24). இவர் தன்னை கடந்த 40 நாட்களில் 6 முறை பாம்பு கடித்ததாக தமிழரான மாவட்ட ஆட்சியர் இந்துமதியிடம் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் தலைமையில் விசாரணைக்கு ஆட்சியர் இந்துமதி உத்தரவிட்டார். 48 மணி நேர விசாரணைக்கு பிறகு அறிக்கையானது ஆட்சியரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், விகாஸை ஒரே ஒரு முறைதான் பாம்பு கடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அச்சத்தால் அவருக்கு பாம்பு கடிப்பது குறித்த பீதி உருவாகிவிட்டது. இதனால் அவர் அடிக்கடி தன்னை பாம்பு கடித்துவிட்டதாக கருதிவிடுகிறார். இதனால்தான் அவர் மருத்துவமனையிலும் 6 முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் அந்த இளைஞரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பாம்பு கடிப்பதாக தெரிவித்திருந்தார். ஒவ்வொரு முறையும் சனி, ஞாயிறு வந்தாலே தனக்கு அச்சமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
விகாஸை கடந்த ஜூன் 2 ஆம் தேதி பாம்பு கடித்த முதல் சம்பவத்திற்கு பிறகு அவர் பாம்புக்கு ஏதோ குற்றம் செய்துவிட்டதாகவே அந்த கிராம மக்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பாம்புகள் ஒரு முறை கடித்துவிட்டால் , அதன் பழியை தீர்க்க கொல்லும் வரை விடவே விடாது என சொல்லப்பட்டதால் விகாஸிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
பாம்பு கடி சிகிச்சைக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டதால் விகாஸ் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆட்சியர் இந்துமதி விசாரணை குழுவை அமைத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து ஆட்சியருக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ஆட்சியர் இந்துமதி மதுரை மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவர்.
இதே போல் உத்தரப்பிரதேசத்தின் பூல்பூர் மாவட்டம் பத்வாபூர் கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு இச்சாதாரி பாம்பு தன்னை கடித்ததாக சந்தீப் படேல் கூறி வந்தார். 27 வயதான இவருக்கு திருமணத்தின் போது மணப்பெண்ணாக ஒரு பாம்பு இருந்துள்ளது. பண்டிதர் வேதம் மந்திரங்களை ஓத, பாம்புக்கு தாலி கட்டும் நேரத்தில் உத்தரப்பிரதேச போலீஸார் வந்தனர்.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். அது போல் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில் எட்டாவா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் முன் ஜென்மத்தில் தான் ஒரு பெண் நாகமாக இருந்ததாக கூறினார். அருகில் உள்ள புஜுர் கிராமத்தின் சிவன் கோயில் கிணற்றில் ஆண் நாகத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறினார்.
தன்னுடன் சேர்த்து கொல்லப்பட்ட ஆண் நாகம் மீண்டும் மனிதராக மறுபிறவி எடுத்துள்ளதாகவும் அவர் அதே கிராமத்தில் இருப்பதாகவும் அந்த பெண் கூறினார். மேலும் அந்த நபருக்கு முதுகில் மச்சம் இருக்கும் என கூறி அந்த இளைஞரை அடையாளம் காட்டியிருந்தார். பிறகுதான் உண்மை தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் ஆணவக் கொலைக்கு அஞ்சி இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றினர் என்பது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications