25 லட்சம் மொபைல் போன்கள்.. உத்தரப் பிரதேச இளைஞர்களின் கல்விக்காக யோகி ஆதித்யநாத் புது யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 25 லட்சம் செல்போன்களை கொள்முதல் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இளைஞர்களை கவரும் வகையில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்படும் 25 லட்சம் ஸ்மார்ட்போன்களை வாங்க உத்தரப் பிரதேச அமைச்சரவை செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு டெக்னிகல் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.9,000 உதவித்தொகை வழங்கவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொற்றுநோய்களின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதற்காக நவோதயா வித்யாலயா மாதிரியில் அடல் அவசிய (குடியிருப்பு) பள்ளிகளை நடத்துவதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, "இளைஞர்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம் ஐந்தாண்டுகளுக்குச் செல்லுபடியாகும். உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சுகாதாரக் கல்வி நிறுவனங்கள் அல்லது திறன் மேம்பாடு மற்றும் ஐடிஐ படிப்புகளில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கு செல்போன்கள் வழங்கப்படும். 2023-2024 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக மாநில அரசு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதேபோல முதலமைச்சரின் தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தொழில்நுட்பம் அல்லாத டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் மாதாந்திர தொழிற்பயிற்சி பெறுவதற்கு ரூ.9000 அனுமதிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவையனைத்தும் மாநிலத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டவை அனைத்தும் கடந்த 6 ஆண்டுகளில் சாத்தியமாகியுள்ளது. இந்நிலையில் இனி வரும் ஐந்து ஆண்டுகளிலும் நாங்கள் திட்டமிட்டதை சாத்தியமாக்க உழைத்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications