உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு இடமே கிடையாது.. யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் குற்ற சம்பவத்திற்கும் குற்றவாளிகளுக்கும் இடமே கிடையாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். இதேபோல் பால் உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால நடைமுறை பின்பற்றப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கேட்டறிந்த பிறகு பேசிய யோகி ஆதித்யநாத், ''உத்தர பிரதேச மாநிலத்தில் கிரைம் கிரிமினல்களுக்கு இடம் கிடையாது. எந்த ஒரு சூழலிலும் குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம்'' என்றார்.

வளர்ச்சி பணிகளை ஆய்வு
மேலும் என்.சி.ஆர் பகுதியை ஒட்டியை அமைந்துள்ள பாக்பத் மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் இந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். மாவட்டத்தில் உள்ள கலெக்ட்ரேட் ஆடிட்டோரியத்தில் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

பாரபட்சம் இன்றி கிடைக்க
அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகள் அனைவருக்கும் எந்த பாரபட்சமும் இன்றி கிடைக்க வழி செய்யப்படும். தனியார் பள்ளிகள் விளையாட்டு போட்டிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை பள்ளிகள் நடத்துவதையும் ஊக்குவிக்க வேண்டும். பள்ளி குழந்தைகளின் சீருடைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி வேறு எதற்கும் திருப்பிவிடக்கூடாது. பள்ளி குழந்தைகளின் சீருடைகளுக்கு மட்டுமே இந்த நிதி செலவிடப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பகல் நேரத்தில் தெரு விளக்குகள்
அரசு கூட்டங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிப்பது மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். மின்சாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. பகல் நேரத்திலும் கூட தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. நாட்டின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் இதுபோன்ற வீணடிப்புகள் தடுக்கப்பட வேண்டும்.

பால் உற்பத்தியில்..
இதனிடையே, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால் உச்சி மாநாடு 2022 நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத் பேசுகையில், ''மக்கள் தொகை அடிப்படையில் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம் தான். பால் உற்பத்தியிலும் உத்தர பிரதேசம் தான் முதன்மை வகிக்கிரது. ஆண்டுக்கு 319 லட்சம் மெட்ரிக் டன் பால் உற்பத்தி உத்தரபிரதேசத்தில் மட்டும் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியை மேலும் பெருக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications