உ.பி.யில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ்... ராஜஸ்தானில் இருந்து கொண்டு அறிக்கை கேட்கும் யோகி
உத்தர பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கொல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தர் அருகே உள்ள சயானா என்ற கிராமத்தில் 25- க்கும் மேற்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டியை வெட்டி குவித்து வைத்திருந்தனர். இதனை கண்ட கிராம மக்கள் , பசுக் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, கொல்லப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டியின் பாகங்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, புல்சந்தர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தை வன்முறையாக மாறியது. கூட்டத்தில் இருந்த கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசாரின் வாகனங்களுக்கு தீயை வைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போக, 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பலி
கல்வீச்சில் புறக்காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் படுகாயம் அடைந்தார். அவரை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று, காருக்குள் கொண்டுச் சென்று சரமாரியாக சுட்டது. இதில், காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞர் பலி
இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த , போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குண்டு அடிப்பட்டு உயிரிழந்த இளைஞன் பெயர் சுமித் (18) என்பது விசாரணையில் தெரியவந்தது. அங்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் குவிப்பு
புலந்த்சாகர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் 3 நாள் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தக் கலவரம் வெடித்திருப்பதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. போலீசார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் உறுதி
இதற்கிடையே, ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும் படி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications