சீட் கொடுக்க பாஜக மறுப்பு.. முந்தி கொண்டு தேர்தல் போட்டியிலிருந்து விலகிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்
லக்னோ: பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், காஜியாபாத் எம்பியும், மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங்-ன் பெயர் இடம்பெறவில்லை. தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதை முன் கூட்டியே அறிந்த வி.கே.சிங், முந்திக் கொண்டு, தான் லோக் சபா தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் நேருக்கு பின்னர் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுபெற்கும் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. எனவே இதற்காக மத்தியில் பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இதற்கான தயாரிப்பு வேலைகளில் கட்சி தீவிரமாக இயங்கி வருகிறது. இந்த முறை எப்படியேனும் 400 தொகுதிகளில் வென்றுவிட வெண்டும் என கட்சி திட்டமிட்டுள்ளது. எனவே, நட்சத்திர வேட்பாளர்களுக்கே அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்திய ராணுவத்தின் முன்னாள் ஜெனரல் வி.கே.சிங் இந்த முறை போட்டியிட மாட்டார் என்று கூறியிருக்கிறார். பாஜக தற்போது வரை 5 கட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இதில் வி.கே.சிங்கின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக அதாவது, 2014ம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வி.கே.சிங் இருந்திருக்கிறார். மட்டுமல்லாது, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு இந்த தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பாஜக அவருக்கு வாய்ப்பை மறுத்துவிட்டது. நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் கூட அவருடைய பெயர் இல்லை.
முன்னதாக தான் தேர்தலிலிருந்து விலக போவதாக இவர் அறிவித்திருந்தார். அதாவது, "ஒரு ராணுவ வீரராக இந்த தேசத்தின் சேவைக்காக எனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக காஜியாபாத்தை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அயராது உழைத்தேன். இந்த பயணத்தில் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காஜியாபாத் மக்களிடமிருந்தும், பாஜக உறுப்பினர்களிடமிருந்தும் நான் பெற்ற அன்பு எனக்கு விலைமதிப்பற்றது" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்த உணர்வுகளுடன் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன். அதன்படி 2024 தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இந்த முடிவை எடுப்பது என்பது எளிதாக இருக்கவில்லை. புதிய திசைகளில், எனது நாட்டிற்கு வேறு வழியில் சேவை செய்வேன்" என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் விமானப்படை அதிகாரி போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications