உ.பி.யில் நாளை மறுநாள் 6-ம் கட்ட தேர்தல்- 5 அமைச்சர்களுக்கு அக்னி பரீட்சை
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. உ.பி. 6-ம் கட்ட தேர்தல் களம் 5 அமைச்சர்களுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என கூறப்படுகிறது.
403 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

6-ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு
உ.பி.யில் 6-ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் மார்ச் 3-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 57 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் தனித்தொகுதிகள் எண்ணிக்கை 11. 6-ம் கட்ட தேர்தலில் 676 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 5 பேர் அமைச்சர்கள். இவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக 6-ம் கட்ட வாக்குப் பதிவு இருக்கும். இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

கள நிலவரம்
6-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் 57 தொகுதிகளில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 46 இடங்களில் வென்றது. இதில் 37 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 6-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 27% பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள். 38% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.

வேட்பாளர்களின் சொத்துகள்
இதில் சிஸ்வா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் தமக்கு ரூ500 மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளார். பெல்தாரா சாலை தொகுதி சுயேட்சை வேட்பாளர் சிமோன் பிரகாஷ் தமக்கு ரூ6,600 மதிப்பிலான சொத்து மட்டுமே இருக்கிறது என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

கிரிமினல் வழக்குகள்
சமாஜ்வாதி கட்சியின் 48 வேட்பாளர்களில் 40 பேர், பாஜகவின் 52 வேட்பாளர்களில் 23 பேர், காங்கிரஸ் கட்சியின் 56 வேட்பாளர்களில் 22 பேர், பகுஜன் சமாஜ் கட்சியின் 57 வேட்பாளர்களில் 22 பேர், ஆம் ஆத்மி கட்சியின் 51 வேட்பாளர்களில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications