உ.பி. தேர்தல்...து.மு. பதவி, ராஜ்யசபா சீட்- சொன்னபடி நடக்கலைன்னா.. பாஜக-வை மிரட்டும் லோக்கல் கட்சி!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வென்றால் துணை முதல்வர் பதவியை தங்களுக்கு தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.. இல்லையெனில் அந்த கட்சியால் நிம்மதியாக இருக்க முடியாது என நிஷாத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

பீகார் விஐபி கட்சி
அத்துடன் சிறு சிறு கட்சிகளும் கூட்டணிக்கான பேரத்தை நடத்தி வருகின்றன. பீகாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது விகாஸ் இன்சான் கட்சி. இந்த கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணியா?
அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டசபை தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடும் என விகாஸ் இன்சான் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவோமா? இல்லையா? என்பதை தெரிவிக்க இயலாது என்றும் பொடிவைத்து பேசுகின்றனர் அந்த கட்சித் தலைவர்கள்.

அமித்ஷாவுடன் நிஷாத் தலைவர் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உ.பி.யின் நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத் சந்தித்து பேசினார். நிஷாத் என்பது உ.பி., பீகாரில் மீனவர் சமூகத்தை குறிக்கக் கூடியது. உ.பி.யில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளோம் என்கிறது இந்த கட்சி.

பாஜகவிடம் 160 சீட்டுகள்
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் நிஷாத், பாஜகவிடம் 160 தொகுதிகள் கேட்டிருக்கிறோம். பாஜகவும் துணை முதல்வர் பதவி, ராஜ்யசபா சீட் ஆகியவை தருவதாக சொல்லி இருக்கிறது. பாஜக வெற்றி பெற்றால் நான்தான் துணை முதல்வர். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறோம்.

பாஜகவுக்கு லோக்கல் கட்சி எச்சரிக்கை
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் பாஜக இந்த வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்று இந்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றாமல் போனால் நிச்சயமாக அந்த கட்சியை நிம்மதியாக இருக்கவிடமாட்டோம் என எச்சரித்தார் சஞ்சய் நிஷாத். பாஜகவை இந்த எச்சரிக்கை மிரள வைத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications