உ.பி. தேர்தல்.. ஆட்டத்தை தொடங்கிய சமாஜ்வாதி- மாயாவதி கட்சி மாஜிக்களை அள்ளியது!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆட்டத்தை சமாஜ்வாதி தொடங்கி இருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தமது கட்சியில் இணைத்து கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முழு வீச்சில் உ.பி. தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரியங்கா ஆலோசனை
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் என்கிறது. உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி இருந்தார்.

அகிலேஷ் யாதவ் அதிரடி
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஜாதிய வாக்குகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இதனடிப்படையிலும் ஜாதிகளின் முக்கிய அரசியல் தலைவர்களை இலக்கு வைத்தும் பெரிய கட்சிகள் கணக்குப் போட்டு காய் நகர்த்துகின்றன. சமாஜ்வாதி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தர்மபால் சிங், பகுஜன் சமாஜ் மாஜி மூத்த தலைவர் குன்வர் சந்த் வகீல் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஜில்லா பரிஷத் தலைவர்களையும் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் சேர்த்து வருகிறார்.

ஜாதி வாக்குகள் கணக்கு
சமாஜ்வாதி கட்சியில் இணைந்த தர்மபால் சிங், குன்வர் சந்த் வகீல் இருவரும் ஆக்ரா பகுதியில் தீர்மானிக்கும் சக்திகளான தாக்கூர் மற்றும் ஜாதவ் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக குன்வர் சந்த் வகீல் நிறுத்தப்பட்டால் பாஜகவுக்கு போகும் தலித் வாக்குகள் திசைமாறும் என்பது அகிலேஷ் யாதவின் கணக்கு.

தலித் வாக்குகள் என்னவாகும்?
ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், எராளமான தலித் இளைஞர்களை கட்சியில் சேர்த்து வருகிறார். இருந்தபோதும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கான தலித் வாக்குகளை ஆசாத் கட்சி பிரிக்குமா? என்பது கேள்விக்குறி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications