உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத்... அவசர சட்டம் கொண்டு வர... முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு!!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதைத் தடுக்க தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருந்த பேட்டியில், ''காதல், திருமணம் என்ற பெயரில் சமீப காலமாக பெண்களை ஏமாற்றி மதம் மாற்றி பின்னர் கொடுமை செய்வது அரங்கேறி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆராய வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்'' என்றார்.
முன்னதாக, கான்பூரில் லவ் ஜிகாத் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட ஆணையம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கட்டாய மதமாற்றம் குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருந்தது. இத்துடன் வரைவு சட்ட நகலையும் அளித்து இருந்தது. இதற்குப் பெயர், 'உத்தரப் பிரதேச மதச் சுதந்திர மசோதா, 2019' என்று கமிஷன் செயலர் சப்னா திரிபாதி தெரிவித்து உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பின்னர் மதமாற்றம் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் சில இடங்களில் வன்முறையும் வெடித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு கடுமையான அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்து வருகிறார்.
ஏற்கெனவே உள்ள சட்டங்கள் மதமாற்றத்துக்கு எதிராக போதுமானதாக இல்லை என்பதால், புதிய சட்டம் அவசியம் என்று முதல்வர் கருதுவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்ட ஆணையம் 268 பக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மத்தியப்பிரதேசம், ஒடிசா, அருணாச்சலம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், சத்திஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் மோசடி திருமணங்களுக்கு எதிராகச் சட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications