இந்தியாவில் இன்னொரு ஜின்னா உருவாக விடமாட்டோம்.. யோகி ஆதித்யநாத் ஆவேசம்.. எதற்காம் தெரியுமா?
லக்னோ: வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் புதிய ஜின்னாவை உருவாக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். அதேபோல மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்வி நிறுவனத்திலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனிடமும் 'பாரத மாதா' மீதான மரியாதை உணர்வு அதிகரிக்கும்" என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் வந்தே மாதரம் பாடலை எதிர்த்து சாம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியா-உர்-ரஹ்மான் பார்க் பேசியதை சுட்டிக்காட்டி இருந்த யோகி ஆதித்யநாத், "இது புதிய ஜின்னாக்களை உருவாக்கும் சதி. இந்தியாவில் இன்னொரு ஜின்னா உருவாக அனுமதிக்கக்கூடாது. அப்படி உருவாகத் துணிந்தால், நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விடுவதற்கு முன்பே அவர்கள் புதைக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நியாயமற்றது. நாட்டின் ஒற்றுமைக்கு முன்பாக மத நம்பிக்கை இரண்டாம் பட்சமானது.
1923-ல் முகமது அலி ஜவஹர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே நாடு பிரிந்தது. இந்த பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம். முகமது அலி ஜின்னா, 1913 முதல் ஆகஸ்ட் 14, 1947 வரை அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்தார். பாகிஸ்தான் உருவான பிறகு அதன் முதல் கவர்னர் ஜெனரலாக 1948-ல் இறக்கும் வரை பதவி வகித்தார். முகமது அலி ஜவஹர் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் இணை நிறுவனர்களில் ஒருவர்.
வந்தே மாதரம் என்பது நாட்டைப் பாதுகாக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் போருக்குச் செல்லும் முன் பாடிய பாடல், இது சுதந்திரத்திற்கான மந்திரமாக மாறியது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இப்போது சிலர், இந்த பாடல் ஒரு குறிப்பிட்ட மத்தின் உடையது என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் இந்தப் பாடல் கட்டாயமாக பாடப்பட வேண்டும். எதிர்காலத்தில் நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விட இரண்டாவது ஜின்னா உருவாகாமல் இருக்க இத்தகைய முயற்சி அவசியம்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications