வேத மந்திரம் ஓதி யமுனையில் பூஜை.. எடுபடுமா பிரியங்கா காந்தி யுக்தி? உபியில் அனல் பறக்கும் பிரசாரம்
லக்னோ: உத்தரப்பிரதேச முதற்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா காந்தி.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் இந்த மாதம் நடைபெறவுள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் நாளை நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
லாக்டவுன் போட்டதால் நடந்தே போன தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் உதவியது குற்றமா? மோடிக்கு பிரியங்கா கேள்வி
காங்கிரஸ்
உத்தரப்பிரதேச தேர்தலைப் பொருத்தவரையில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தான் மிகப்பெரிய பலத்துடன் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில், 403 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே காங்கிரஸ் தங்கள் வெற்றியைப் பதிவு செய்தது. அதோடு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் தோல்வியைத் தழுவினார் ராகுல் காந்தி.
பிரியங்கா காந்தி
இந்நிலையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். அவருடைய செயல்பாடுகள், மக்களிடம் பழகும் தன்மை, மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவது என உத்தரப்பிரதேச மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸின் முகமாகவே பிரியங்கா காந்தி பார்க்கப்படுகிறார்.
பிரசாரம்
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். பிரசாரத்தை மேடைகளில் செய்யாமல், மக்களோடு மக்களாய் நின்று பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். அதனால் அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. டிராக்டரில் பயணிக்கிறார், செல்பி எடுக்கிறார். பிரியங்கா காந்தியின் அலை உத்தரப்பிரதேசத்தில் அடிக்கத்தொடங்கியுள்ளது.
ஆக்ரா
பிரியங்கா காந்தி நேற்று ஆக்ரா, மதுரா,மீரட் உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது மதுராவில் உள்ள விசாரம் கேட் பகுதியில், வேத மந்திரங்கள் ஓதி யமுனா பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். அதன்பிறகு நாளை நடைபெறவுள்ள முதற்கட்ட தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். அங்கு இந்துக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து பிரியங்கா காந்தி இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
செல்பி
பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தியுடன் செல்பி எடுக்க அங்கிருந்த பெண்கள் ஆர்வம் காட்டினர். ''உத்தரப்பிரதேச மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த பாஜக அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கவில்லை. அதை மக்கள் நினைவில் வைத்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று பிரசாரம் செய்தார்.