அடுத்த 5 வருஷத்துக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: உபி.யில் அதிரடியாக அறிவித்த அமித்ஷா
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்காக இதுவரை இரண்டுகட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. அடுத்த கட்டத் தேர்தலுக்காக பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பாஜக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துவருகின்றது.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபைத் தொகுதிகளுக்குமான தேர்தல் மார்ச்
7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது

அமித்ஷா
உத்தரப்பிரதேச மாநிலம் திபியாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, ''உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களுக்குப் பிறகு மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சி அழிக்கப்பட்டுவிட்டது.

இலவச மின் கட்டணம்
மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஹோலி பண்டிகை மார்ச் 18ம் தேதி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை நாட்களில் பாஜக அரசை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். இலவச கேஸ் சிலிண்டர்கள் மார்ச் 18ம் தேதி உங்கள் வீட்டிற்கு வரும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. உத்தரபிரதேசத்தில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜகவின் பெரும்பான்மை இந்த முறை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்றார்.

வாக்குறுதிகள்
தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக தங்கள் வாக்குறுதிகளை ஓவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்கிறது. தேர்தல் அறிக்கையில் ''ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச டூ வீலர் என்று அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு பேருந்தில் இலவச பேருந்து பயணம் செய்யலாம். லவ் ஜிஹாத் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரபிரதேச பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.

நான்கு முனை போட்டி
உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. பெரிய கூட்டணிகள் இல்லாததால், பாஜக மற்றும் சமாஜ்வாதிக்கு தான் நேரடியாக போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் தோல்விக்கு பிறகு சமாஜ்வாதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. சமாஜ்வாதிக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி, காங்கிரஸ் பிரியங்கா காந்தி, என மாநிலம் முழுவதும் பலர் பிரசாரம் செய்துவருவதால், உத்தரப்பிரதேசத்தில் அனல் பறந்துவருகிறது.












Click it and Unblock the Notifications