முலாயம் சிங் மரணம்.. 3 நாள் துக்கம் அனுசரிக்கும் உபி அரசு! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - யோகி
லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமான நிலையில் உபி அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும், பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும், 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலும் என 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மருத்துவமனை
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலைவிட்டு விலகி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி முன்பாக முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மறைந்தார் முலாயம்
தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ் மறைவால் உத்தரப்பிரதேச மக்கள், சமாஜ்வாடி தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

யோகி ஆதித்யநாத் ட்வீட்
முலாயம் சிங் யாதவ் மறைவு குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். "முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் தருகிறது. அவரது அவரது மறைவு பொதுவுடைமை கொள்கை மற்றும் போராளியின் சகாப்தத்துடைய முடிவாக இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதோடு அவரை இழந்துவாடு குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.

3 நாள் துக்கம்
முலாயம் சிங் யாதவ் மறைவு தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். துக்கமான இந்த நேரத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மகன் அகிலேஷ் யாதவ் அவர்களிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறினேன்." என்றார்.












Click it and Unblock the Notifications