மியாமி விமான நிலையத்தை அப்படியே தரைமட்டமாக்கப் போறேன்.. பீதி கிளப்பிய உபி வாலிபர்!
லக்னோ: பிட்காய்ன் வாங்குவதில் ஏமாற்றப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர், மியாமி விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அவரை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
மியாமி விமான நிலையத்திற்கு இவர் பலமுறை போன் செய்து மிரட்டியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் பரபரபடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உ.பி. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த நபரைக் கைது செய்தனர். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து உ.பி. தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஆசிம் அருண் கூறுகையில், சம்பந்தப்பட்ட நகர் அமெரிக்காவிலிருந்து 1000 அமெரிக்க டாலர் மதிப்பிலான பிட்காய்ன்களை வாங்கியுள்ளார். ஆனால் அதில் அவர் ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் எப்பிஐயிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்து மியாமி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
முன்னதாக இந்த நபர் மியாமி விமான நிலையத்தைத் தொடர்ந்து கொண்டு ஏகே 47 துப்பாக்கி, கிரனேட் கையெறி குண்டு, தற்கொலைப் படை உடையுடன் வருகிறேன். வந்து அத்தனை பேரையும் கொல்வேன். விமான நிலையத்தையும் தகர்ப்பேன் என்று கூறி பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார்.
வாய்ப் கால் மூலமாக இவர் பேசி மிரட்டியுள்ளார். அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடாமல் மிரட்டியுள்ளார் இந்த நபர். இந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை உ.பி. போலீஸார் வெளியிடவில்லை.