யார கல்யாணம் பண்றது தெரில.. 4 இளைஞர்களுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்.. குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நான்கு இளைஞர்களுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்ணால், யாரை திருமணம் செய்துகொள்வது என முடிவெடுக்க முடியாததால் குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு செய்யப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.
மருதமலை திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் புகழ்பெற்ற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். திருமணக் கோலத்தில் போலீஸ் நிலையத்திற்கு வரும் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்க வடிவேலு முயல்வார்.
ஆனால். அப்போது அவரது முந்தைய கணவர்கள் அங்கு வந்துவிடுவார்கள். இதனால் குலுக்கு சீட்டு முறையில், அந்த கதாபாத்திரம் தனது துணையைத் தேர்ந்தெடுக்கும். இதேபோன்ற ஒரு வினோத சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
பெண் மாயம்
உத்தரப் பிரேதச மாநிலத்திலுள்ள அம்பேத்கர் நகரிலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன் நான்கு இளைஞர்களுடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். திடீரென்று பெண் மாயமானதால் அவரது குடும்பத்தினர், ஊர் முழுவதும் தேடியுள்ளனர். இருப்பினும், பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசில் புகார்
அப்போது நான்கு இளைஞர்களில் ஒருவரது உறவினர் வீட்டில் அப்பெண் தங்கியுள்ளார். இதை அப்பெண்ணின் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த அப்பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை ஏமாற்றி நான்கு பேரும் கடத்தி சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.
நான்கு பேரும் ஷாக்
இருப்பினும், காவல் துறையிடம் செல்ல வேண்டாம் என்று அப்பெண்ணின் குடும்பத்தினரைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தடுத்துள்ளனர். இந்த சிக்கலுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரப் பஞ்சாயத்தையும் அவர்கள் கூட்டியுள்ளனர். அங்கு உனக்கு யாரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் என அப்பெண்ணின் கருத்தைக் கேட்டுள்ளனர். தனக்கு நான்கு பேரையும் பிடிக்கும் என்றும் அதில் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய முடியவில்லை என்றும் அப்பெண் பதிலளித்துள்ளார்.
குலுக்கு சீ்ட்டு முறை
பெண்ணின் இந்தப் பதில் நான்கு இளைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நான் இளைஞர்களில் யாரும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக முடிவு எடுக்க விரும்பிய பஞ்சாயத்து தலைவர்கள், குலுக்கல் சீட்டு முறையில் மணமகனை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்க நான்கு இளைஞர்களின் பெயர்களும் துண்டு சீட்டில் எழுதி ஒரு பாக்ஸில் போடப்பட்டது. அதிலிருந்து ஒரு சீட்டை அப்பெண் தேர்வு செய்தார். அந்த இளைஞருடன் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.