அதெப்படி இந்து சாமியார்களை விமர்சிக்கலாம்? ஆல்ட் நியூஸ் முகம்மது ஜுபைர் மீது உ.பி. பாஜக அரசு வழக்கு!
லக்னோ: இந்து சாமியார்களை வெறுப்பை கக்குபவர்கள் என ட்விட்டரில் விமர்சித்ததற்காக ஆல்ட் நியூஸ் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர் மீது உ.பியில் ஆளும் பாஜக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதர் கோவிலை அண்மித்த ஞானவாபி மசூதி விவகாரம் பெரும் சர்ச்சையாக உள்ளது. இந்து ஆலயத்தின் மீதே ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள மசூதிகளை ஆய்வு செய்ய கோரியும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியது. இந்த விவாதத்தில் சர்ச்சைக்குரிய இந்து சாமியார்களான யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, மகந்த் பஜ்ரங் முனி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

டைம்ஸ் நவ் டிவியின் இந்த விவாத வீடியோ கிளிப்பிங்கை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் முகம்மது ஜுபைர் , சர்ச்சைக்குரிய இந்து சாமியார்களை வெறுப்பை கக்குபவர்கள் என விமர்சித்திருந்தார். இந்து சாமியார்கள் மாநாடுகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்; இனச் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்; இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்; பிரபாகரன் போல இந்துக்களிடையே ஒரு பிரபாகரன் உருவாக வேண்டும் என்ற பேச்சுகள் எல்லாம் பேசியவர்கள்தான் இந்த சாமியார்கள். அதனால் வெறுப்பை கக்குபவர்கள் என விமர்சித்து முகம்மது ஜுபைர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Recommended Video
இது தொடர்பாக உ.பி. மாநிலம் கைராபாத் போலீசில், ராஷ்டிரிய ஹிந்து ஷேர் சேனா என்ற அமைப்பின் மாவட்ட தலைவர் பகவான் சரண் என்பவர் முகம்மது ஜுபைர் மீது போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் முகம்மது ஜுபைர் மீது உ.பி.போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகள் பரப்பிவிடும் பல பொய் செய்திகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது ஆல்ட் நியூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications