250 ரூபாய் பீஸ் சார்.. கட்டலன்னு ஆசிரியர் அடிச்சே கொன்னுட்டாரு! கதறி அழும் பள்ளி மாணவனின் உறவினர்கள்
லக்னோ: பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி 3 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்து கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் சிர்சியா பகுதியில் பண்டிட் பிரம்மதட் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அனுபம் பதக்.
இவர் அதே பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த மாணவன் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவன் கொலை
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் மாமா காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஆசிரியர் தாக்கி மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறது.

வழக்குப்பதிவு
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் கே மவுரியா தெரிவிக்கையில், "ஆசிரியர் அனுபம் பதல் தாக்கியதில் மாணவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மாமா புகாரளித்து இருக்கிறார். ஆசிரியர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது." என்றார்.

பள்ளி கட்டணம்
இதற்கிடையே பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறியே ஆசிரியர் மாணவனை அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மாணவனின் சகோதரர் ராஜேஷ் விஸ்வகர்மா தெரிவிக்கையில், "மாதம் ரூ.250 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி வருகிறோம். இது தெரியாமல் ஆசிரியர் என் தம்பியை தாக்கி கொன்றுவிட்டார்." என்றார்.

போராட்டம்
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது, "என் தம்பியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ரத்தக் கசிவும் ஏற்பட்டு உள்ளது. அந்த ஆசிரியர் என் தம்பியை கொன்றுவிட்டார்." என்றார். மாணவனின் மரணத்துக்கு நீதி கோரியும், அடித்துக் கொன்ற ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications