அடுத்து யாரை கொலை பண்ணுவாங்களோ.. பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் கண்ணீர்!
உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் கண்ணீர் பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் கண்ணீர் பேட்டி அளித்து இருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதியில் நேற்று இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் நேற்று பசுக்கொலை தொடர்பாக கலவரம் நடந்தது.
இதை கட்டுப்படுத்த சென்ற போது சுபோத் குமார் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனைக்கு செல்ல விடாமல் சுற்றி நின்ற பசுக்காவலர்கள்.. உ.பி இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!
குட்டி குடும்பம்
மிகவும் நேர்மையான அதிகாரியான சுபோத் குமார் இதற்கு முன்பே இப்படி சில முறை கலவரங்களில் சிக்கி இருக்கிறார். இவருக்கு மிக மோசமான காயங்கள் கூட ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இரண்டு மகன்களும் தற்போது கல்லூரி படித்து வருகிறார்கள்.
குடும்பம் கதறுகிறது
இவரின் குடும்பமே இந்த கொலை சம்பவம் கேட்டு கதறி அழுது வருகிறது. நேற்று மீரட் மருத்துவமனைக்கு வந்த சுபோத் குமாரின் குடும்பம் கதறி அழுத காட்சி பலரை உருக்கியது. அங்கிருந்த சில போலீசார் கூட இந்த காட்சியை பார்த்து கண்ணீர்விட்டு இருக்கிறார்கள்.
அப்பா அப்படி
சுபோத் குமாரின் மகன் அபிஷேக் இதுகுறித்து பேட்டியளித்தார். அதில், என் அப்பா எப்போதும் என்னை நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுவார். மிகவும் கறாரான மனிதர் அவர். கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவருக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும். இப்படி இந்த மோசமான கலவரம் காரணமாக அப்பாவை இழந்துவிட்டேன், அடுத்து யாருடைய அப்பாவை அவர்கள் கொலை செய்ய போகிறார்களோ'' என்று கோபமாக கேட்டு இருக்கிறார்.
நல்ல போலீஸ்
இதுகுறித்து மீரட் ஏடிஜி பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் மிகச்சிறந்த போலீஸ் ஒருவரை இழந்துவிட்டோம். இதில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக பிடிப்பதே எங்கள் வேலை. இதில் எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுப்போம். இதற்காக பெரிய விசாரணை குழு அமைக்க இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.