தோட்டத்தில் தொங்கிய பசுக்களின் சடலம்.. உ.பி கலவரம் முன்பே திட்டமிட்டு நடந்ததா?.. புதிய பின்னணி!
உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பசுக்காவலர்கள் நேற்று நடத்திய கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர கொலை குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த கலவரமே இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. புல்சந்தார் தாசில்தார் ராஜ்குமார் பாஸ்கார் இதுகுறித்து திடுக்கிடும் விவரங்களை அளித்துள்ளார்.

மரத்தில் தொங்கியது
பசுக்கள் கொல்லப்பட்டதுதான் இந்த கலவரத்திற்கு காரணம். ஆனால் இந்த பசுக்களை கொன்று, அதன் தோலை கரும்பு தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று போட்டு இருக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். வேண்டும் என்றே மக்களுக்கு இது தெரிய வேண்டும் என்று வெளியே தொங்கவிட்டு சென்று இருக்கிறார்கள்.

உடனே வந்து சேர்ந்தனர்
இந்த விஷயம் தெரிந்ததும் அந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கில் பசு பாதுகாவலர்கள் வந்து உள்ளனர். ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த 400க்கும் அதிகமான நபர்கள் அங்கு வந்து இருக்கிறார்கள். அந்த பசுக்களை எடுத்துக் கொன்று கலவரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

எப்படி நடந்தது
தாசில்தார் ராஜ்குமார் இதை குறித்துதான் சந்தேகம் எழுப்புகிறார். அந்த பசுக்காவலர்கள் எல்லோரும், ஏற்கனவே டிராக்டரில் தயாராகி இருந்தது போல வந்துள்ளனர். சரியாக புகார் வந்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் தயாராகி இருந்தால் மட்டுமே இத்தனை ஆட்களை அழைத்துக் கொண்டு வர முடியும். இதனால் இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கலவரமாக இருக்குமோ என்று சந்தேகம் வருவதாக தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.

அதிர வைக்கும் கோணம்
அதேபோல் இந்த கலவரத்திற்கும் அதை தொடர்ந்து போலீஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டத்திற்கும் பின் இன்னொரு கோணமும் இருப்பதாக தகவல்கள் வருகிறது. புல்சந்தார் பகுதிக்கு அருகில் நடந்த இஸ்லாமிய கூட்டம் ஒன்றில் நேற்று காலை 10 லட்சம் இஸ்லாமிய இளைஞர்கள் கலந்து கொண்டனர். ''இதெமா'' என்ற பெயரில் இவர்கள் மத சடங்கு ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் கலவரம் உருவாக்க வேண்டும், இது இந்து இஸ்லாமிய பிரச்சனையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யார் இவர்கள்
இந்த கலவரம் மற்றும் கொலை தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இல்லாமல் பாஜக, சிவசேனா, ஆர்எஸ்எஸ், இந்து யுவா வாஹினி அமைப்பை சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications