தோழியுடன் வாழ விரும்பிய பெண்.. ஆணாக மாற விரும்பிய அவலம்.. கண்ணை மூடச் சொல்லி மந்திரவாதி செய்த செயல்
லக்னோ: தோழியுடன் வாழ என்னை ஆணாக மாற்றுங்கள் என கேட்டு ஒரு மந்திரவாதியை நம்பி சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது நிரம்பிய இவர் தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் 25 வயது ஆகிறதே என பிரீத்திக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் பூனம் குமாரியின் நினைவாக பிரீத்தி இப்போது வேண்டாம், அப்போது வேண்டாம் என திருமண ஏற்பாடுகளை தட்டி கழித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்ற விவகாரம் அவர்களுடைய வீட்டில் தெரியவந்தது. இதனால் இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழலில் பூனத்தை அழைத்து நீ ஆணாக மாறினால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் மறந்துவிடு என பிரீத்தியின் தாய் ஆலோசனை கூறியுள்ளார்.
இது எப்படி சாத்தியம் என பூனம் கேட்ட போது தனக்கு ஒரு மந்திரவாதியை தெரியும் அவரிடம் சென்றால் உன்னை ஆணாக மாற்றுவார் என பிரீத்தியின் தாய் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் பூனம் குமார் லக்கிம்பூர்கேரியில் உள்ள ராம்நிவாஸ் என்ற மந்திரவாதியிடம் சென்று தன்னை ஆணாக மாற்றுமாறு கேட்டுள்ளார்.
அதே வேளையில் பூனத்தை கொலை செய்து விட்டால் ரூ 1.5 லட்சம் பணம் தருவதாக அந்த மந்திரவாதியிடம் பிரீத்தியின் தாய் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஆணாக மாற விரும்பிய பூனத்தைச் சடங்குகள் செய்ய வருமாறு அந்த மந்திரவாதி வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை ஆணாக மாற்ற கண்களை மூடிக் கொண்டு ஆற்றங்கரையில் படுக்குமாறு தெரிவித்தார். அப்போது சுத்தியலை கொண்டு பூனத்தின் கழுத்தில் ஓங்கி அடித்தார். அதில் பூனம் ரத்த வெள்ளத்தில் இறந்தார். மந்திரவாதி கொலை செய்து உடலை முட்புதருக்குள் மறைத்து வைத்துள்ளார்.
இதனிடையே பூனத்தை காணவில்லை என அவருடைய சகோதரர் பர்விந்தர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் பூனம் பேசிய செல்போன் மூலம் விவரங்களை சேகரித்தனர். இதை கேட்டு திடுக்கிட்ட போலீஸார் மந்திரவாதியை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது பூனத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் பூனத்தின் சடலத்தை காட்டுமாறு வனப்பகுதிக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது உடலை போலீஸார் ஆய்வு செய்த போது அவருடைய பிடியிலிருந்து தப்பினார். தப்பி ஓடிய மந்திரவாதியை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த பிளானை தனது தாயுடன் சேர்ந்து போட்டுக் கொடுத்ததில் பிரீத்திக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் அந்த பெண்ணை காணவில்லை. இதையடுத்து எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸில் ஏப்ரல் 18 ஆம் தேதி புகார் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications