சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டு ஜெயில்.. தகுதி நீக்கம்.. கோர்ட் அதிரடி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்று இருக்கிறார். அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் ராம்துலார் கோந்த். துத்தி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவான ராம்துலார் கோந்த் கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

இதில் ராம்துலார் கோந்த் வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு எதிரான வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராம்துலரே கோந்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராத தொகை 10 லட்சத்தையும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைத்து இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் கூறுகையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் சாட்சியங்களை அழித்தல் என அனைத்து எம்.எல்.ஏவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் உறுதி செய்யப்பட்டது" என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதர், நீதிமன்ற தீர்ப்பு குறித்து கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ ராம்துலரே, வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தங்கள் குடும்பத்தினரை ஓராண்டுக்கும் மேலாகவே மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டினார். 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி ராம்துலரே எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்த பிறகு அவரால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவே- சிக்கி தண்டனை பெற்றிருப்பது அம்மாநிலத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆளும் பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications