அயோத்தியில் இன்று உ.பி. அமைச்சரவை கூட்டம்- நவ.9-ந் தேதியை யோகி தேர்வு செய்ய காரணமான '2 சம்பவங்கள்'!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் அயோத்தியில் இன்று நடைபெற உள்ளது. உ.பி. மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல் முறையாக அயோத்தியில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் உ.பி. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் பல்லாயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் வரும் ஜனவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் உத்தரப்பிரதேச மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் அமைச்சரவை கூட்டம்: இதன் ஒருபகுதியாக இன்று அயோத்தியில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அயோத்தியில் அமைச்சரவை கூடுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரவை கூட்ட ஏற்பாடுகள்: உ.பி. அமைச்சரவை கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக அயோத்தி ஆணையர் கவுரவ் தயால் கூறியதாவது: அயோத்தியில் முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முடிவு. அயோத்தி அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படக் கூடும். அனைத்து மாநில அமைச்சர்களும் அயோத்திக்கு வருகை தந்துவிட்டனர். அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக அனுமார் கோவில், ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளனர். அயோத்தி ராம் கதா அருங்காட்சியகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு கவுரவ் தயால் கூறினார்.
1989- நவம்பர் 9-ந் தேதி பூமிபூஜை, அடிக்கல்: நவம்பர் 9-ந் தேதி ஏன் தேர்வு?: அயோத்தியில் நவம்பர் 9-ந் தேதி உ.பி.அமைச்சரவைக் கூட்டுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்ததன் பின்னணியில் சில காரணங்களும் கூறப்படுகின்றன. அயோத்தி பிரச்சனையில் நவம்பர் 9-ந் தேதி மிக முக்கியமான நாளாகும். 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அயோத்தியில் அப்போது சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட வளாகத்துக்கு வெளியே முதன் முதலாக ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. இதனை நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத். பீகார் மாநிலத்தின் தலித் இளைஞஆன காமேஸ்வர் சவுபால்தான் ராமர் கோவிலுக்காக முதல் அடிக்கல் நாட்டினார்.
2019 நவம்பர் 9-ல் அயோத்தி தீர்ப்பு: இதன்பின்னர் சுமார் 30 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதியன்று அயோத்தி ராமர் கோவில்- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலம் 2.77 ஏக்கர் ராம் லல்லா எனவும் இந்துக்களுக்கு சொந்தம்; இங்கே ராமர் கோவில் கட்ட அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மசூதி கட்ட வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உ.பி. மாநில அரசு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இதன் பின்னரே தற்போது ராமர் கோவில் இங்கு கட்டப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் வரலாற்றில் இந்த 2 நவம்பர் 9-ந் தேதியும் மிக முக்கியாமானவை என்பதால் அதே நாளில் இப்போது உ.பி. அமைச்சரவைக் கூட்டத்தை அயோத்தியிலேயே கூட்டியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
#WATCH | Uttar Pradesh: Preparations are underway ahead of Ayodhya Deepotsav. pic.twitter.com/AC14H3j7J1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 8, 2023
21 லட்சம் விளக்குகள்: மேலும் அயோத்தி சராயு நதியின் 51 வாயில்களிலும் மொத்தம் 21 லட்சம் விளக்குகளை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சராயு நதியில் நாளை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
வாரணாசி, மதுரா: அயோத்தியைத் தொடர்ந்து உ.பி. மாநில அமைச்சரவைக் கூட்டங்களில் இதர இந்துக்களின் புனித தலங்களான வாரணாசி, மதுராவில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் முதல்வர் யோகி ஆதித்யநாத். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நேரத்தில் கும்பமேளாவை முன்னிட்டு பிரக்யாராஜில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைநகர் லக்னோவுக்கு வெளியே நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாக இருந்தது.












Click it and Unblock the Notifications