பட்டப்பகலில்.. மக்கள் கண் முன்னே சுடப்பட்ட 21 வயது தலித் பெண்.. உத்தர பிரதேச ஷாக்.. காரணம் என்ன?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தலித் மாணவி ஒருவர் சாலையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு துப்பாக்கி சூடு: உத்தர பிரதேசத்தில் அடிக் கொலை செய்யப்பட்டதன் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் அங்கே நேற்று தலித் மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில் இருக்கும் எய்ட் என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

அங்கே இருக்கும் ராம் லகான் படேல் மகாவித்யாலயா என்ற கல்லூரியில் படித்து வந்தார் ரோஷினி அஹிர்வர். 21 வயதான இவர் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார்.
எய்ட் சாலையில் சென்று கொண்டு இருந்த ரோஷினியை இரண்டு பேர் பைக்கில் பின் தொடர்ந்து உள்ளனர். பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த அவர்கள்.. நாட்டு துப்பாக்கி ஒன்றால் அந்த மாணவியை சரமாரியாக சுட்டுக்கொன்று உள்ளனர்.
காலை 11 மணிக்கு இந்த சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்து உள்ளது. ரோஷினியை சுட்டுவிட்டு அங்கேயே துப்பாக்கியை போட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினார்கள். அங்கே இருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அந்த மாணவியை துப்பாக்கி தோட்டாக்கள் சுட்டதை உறுதி செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று உள்ளனர் இரண்டு இளைஞர்களும்.
ராஜ் அஹிர்வர் என்ற இளைஞர் மீது அந்த மாணவியின் பெற்றோ புகார் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கே கிடந்த துப்பாக்கியும் ஆதாரமாக எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டு சாலையில் கிடைக்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க பரவி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் என்ன? ராஜ் அஹிர்வர் ரோஷினியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பல நாட்களாக ரோஷினி பின் அவர் சுற்றி இருக்கிறார்.
இறுதியில் ரோஷினி முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ராஜ் ரோஷினியை கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் உண்மையான காரணம் இன்னும் தெரியாததால் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தூரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டதாக மக்களும், எதிர்க்கட்சிகளும் புகார் அளித்து வரும் நிலையில்தான் இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்து உள்ளது.












Click it and Unblock the Notifications