ஆணாக தூங்கிய நபரை ஆப்ரேஷன் செய்து பெண்ணாக மாற்றிய டாக்டர்! காரணத்தை கேட்டால் ஷாக்.. பகீர் சம்பவம்
லக்னோ: நீங்கள் ஆணாகத் தூங்கச் செல்கிறீர்கள். ஆனால், தூங்கி எழுந்து பார்த்தால் பெண்ணாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்.. இதெல்லாம் நடக்குமா எனக் கேட்காதீர்கள்.. நமது நாட்டில் தான் இதுபோன்ற ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது.. எப்படி ஆணாகத் தூங்கச் சென்ற அந்த நபர் பெண்ணாக மாறினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான முஜாஹித்.. இவருக்குத் தான் அங்குள்ள உள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூங்கும் போதே பாலின மாற்று ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது.

ஓம்பிரகாஷ் என்ற நபர்தான் முஜாஹித்தை ஏமாற்றி ஆப்ரேஷன் செய்ய வைத்தாகக் கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவர்களையும் ஏமாற்றி ஓம்பிரகாஷ் தான் ஆப்ரேஷன் செய்ய வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஓம்பிரகாஷ் தன்னை மிரட்டித் துன்புறுத்தி வந்ததாக முஜாஹித் கூறுகிறார்.
என்ன நடந்தது: முஜாஹித் உடலில் பிரச்சினை இருப்பதாகவும் இதற்குப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியே ஒம்பிரகாஷ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இதை நம்பி மருத்துவமனைக்கு வந்த முஜாஹித் படுத்து தூங்கிய போது, மருத்துவர்கள் அவருக்கு மயக்க மருந்து செலுத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக முஜாஹித் மேலும் கூறுகையில், "என்னை ஏமாற்றிக் கூட்டி வந்தார்.. நான் இரவு தூங்கினேன்.. காலை எழுந்து பார்த்தால் ஆப்ரேஷன் செய்து இருந்தனர். எனக்குச் சுயநினைவு திரும்பியபோது, நீங்கள் பெண்ணாக மாறிவிட்டீர்கள் என்றார்கள். எனக்கு ஒன்னுமே புரியவில்லை.
பகீர் தகவல்: ஓம்பிரகாஷ் கடந்த சில ஆண்டுகளாகவே என்னை மிரட்டித் துன்புறுத்தி வந்தார். அவர் தான் இதைச் செய்துள்ளார். எனக்கு இப்படி நடந்துவிட்டதால் எனது வீட்டிலும் உறவினர்களும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஓம்பிரகாஷ் மிரட்டுகிறார்.. ஓம்பிரகாஷுக்கும் எனது தந்தைக்கும் நில பிரச்சினை இருக்கிறது. இதன் காரணமாகவே என்னை இப்படிச் செய்துள்ளார்.
இப்போது என்னுடன் தான் வாழ வேண்டும் என மிரட்டுகிறார். திருமணத்திற்குக் கூட ரெடி செய்து வைத்துவிட்டேன் என்கிறார். அதாவது எனது தந்தையைக் கொலை செய்துவிடுவாராம். அதன் பிறகு சொத்து எனது பெயருக்கு வந்துவிடும். என்னைத் திருமணம் செய்துவிட்டால் அது சொத்து ஓம்பிரகாஷ் கைகளுக்குச் செல்லும் என்பதே பிளான்" என்றார்.
போராட்டம்: இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விவசாயத் தலைவர் ஷியாம் பால் தலைமையில் விவசாய அமைப்பினர் மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இது விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பிறகே போராட்டத்தைக் கைவிட்டனர்.
இது தொடர்பாக விவசாய அமைப்பினர் கூறுகையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உடல் உறுப்புகளை விற்கும் கும்பல் தான் இதுபோல செய்து வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த பிரச்சினை முடிவுக்கு வராது" என்றார்.
கோரிக்கை: இந்த விவகாரம் தொடர்பாக முஜாஹித்தின் தந்தை கடந்த ஜூன் 16ஆம் தேதி புகார் அளித்தனர். இதையடுத்து ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இருப்பினும், போலீசார் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் இந்தச் சம்பவத்தால் முஜாஹித் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறைந்தபட்சம் ₹ 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications