இந்து கடவுள் போட்டோ இருந்த பேப்பரில் சிக்கன் வியாபாரம்.. உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரி கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தில் இந்து கடவுள்களின் படங்கள் இருந்த பேப்பரில் சிக்கன் வியாபாரம் செய்த தாலிப் உசேன் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பாலில் வசித்து வருபவர் தாலிப் உசேன். இவர் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
'பிஏ2.75’ இந்தியாவில் பரவும் புதிய கொரோனா! இத்தனை மாநிலங்களில் பாதிப்பா? எச்சரித்த இஸ்ரேல் விஞ்ஞானி!
இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கனை பேப்பரில் வைத்து வழங்குகிறார்.
சிக்கன் வியாபாரி
இந்நிலையில் தான் தாலிப் உசேன் இந்து கடவுள்களின் படங்கள் இருக்கும் பேப்பரில் சிக்கன் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான படங்கள் வீடியோக்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாலிப் உசேன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இந்த புகாரின் பேரில் போலீசார் தாலிப் உசேனின் கடைக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அதற்கு தாலிப் உசேன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நான் வழக்கம்போல் தான் வியாபாரம் செய்கிறேன். எந்த கடவுளையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
கைது
இருப்பினும் புகாரின் அடிப்படையில் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதனால் கோபமடைந்த தாலிப் உசேன் கத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் இறுதியாக தாலிப் உசேனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
3 பிரிவுகளில் வழக்கு
கைதான தாலிப் உசேன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 153ஏ (மதம், இனத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்கவித்தல்), 295ஏ (வேண்டுமென்றே மத உணர்வுகளை அவமதித்து சீற்றத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 307(கொலை செய்ய முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.