விபத்து பலியை தடுக்க.. நெடுஞ்சாலைகளில் 50 கிமீ இடைவெளியில் முதலுதவி மையம்.. உத்தர பிரதேச அரசு பிளான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் முதலுதவி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் வாகன விபத்துகள் நடந்து பலர் பலியாகி வருகின்றனர். ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புகின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயங்கரமான விபத்துகள் நடந்து கொத்து கொத்தாக மக்கள் பலியாவது அவ்வப்போது நடக்கிறது.

இந்நிலையில் தான் விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இதற்கு உத்தர பிரதேசமும் விதிவிலக்கல்ல.
உத்தர பிரதேசத்தில் மட்டும் கடந்த 2019 முதல் 2022ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைகளில் மொத்தம் 14,900 விபத்துகள் நடந்துள்ள நிலையில் 8,479 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக 2022ம் ஆண்டில் மட்டும் 6,011 பேர் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் விபத்து மற்றும் பலி எண்ணிக்கையை குறைக்க அம்மாநில அரசு சிறப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோமீட்டருக்கும் emergency stabilisation centres அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் இந்த மையங்கள் அமைக்கப்படும்போது விபத்தில் சிக்கியவருக்கு உடனடியாக உதவி என்பது கிடைக்கும். இதனால் பலியாவோரின் எண்ணிக்கை குறையும்.
இதற்கான திட்டம் தற்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கும் நிலையில் இந்த மையங்கள் அமைக்கப்படும். இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இத்தகைய மையங்கள் அமைக்கும்படி கேட்டு கொள்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications