காணாமல் போன "மகள்".. அவசரமாக போலீசில் புகார் தரச்சென்ற தந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. உ.பியில் கொடுமை
லக்னோ: தனது மகளை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கச் சென்ற தந்தையை பொதுவெளியில் வைத்து இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் போலீஸாருக்கு மத்தியில், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை ஆணவமாக எடுத்துக் கொண்டு, மக்களை அவமதிக்கும், அவர்களை துன்புறுத்தும் போலீஸாரும் நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள்.
மக்கள் வரிப் பணத்தில்தான் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை கூட மறந்து அவர்கள் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்களிடம் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், பெரும்பாலான போலீஸார் அதை கடைப்பிடிப்பதில்லை. அப்படியொரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
பேனா தொலைஞ்சு போச்சு! போலீஸில் புகாரளித்த விஜய் வசந்த் எம்பி! ஆமா அந்த பேனா விலை எம்புட்டு தெரியுமா?
மாயமான மகள்
உத்தபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேரந்தவர் ஓம்வீர். விவசாயியான இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி இவரது மூத்த மகள் அனுஷ்கா (19) காணாமல் போனதாக கூறப்படுகிறது.
ஓம்வீர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் அனுஷ்கா கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி அனுஷ்காவின் தந்தை ஓம்வீர் பினோலி காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார்.
கிடப்பில் போடப்பட்ட புகார்
ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் அனுஷ்கா குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. புகார் கொடுத்த நாள் முதலாக தினமும் காவல் நிலையத்துக்கு ஓம்வீர் சென்ற போதிலும், அவரது மகள் குறித்து எந்த தகவலையும் போலீஸார் கூறவில்லை. மேலும், அந்த புகாரையும் போலீஸார் கிடப்பதில் போட்டதாக தெரிகிறது. தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஒரு இளைஞர்தான், தனது மகளை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என ஓம்வீர் புகாரில் கூறியிருந்த போதிலும், அவரிடமும் போலீஸார் இதுவரை விசாரணை நடத்தவில்லை.
இன்ஸ்பெக்டர் அலட்சியம்
இதனால் கவலை அடைந்த தந்தை ஓம்வீர், நேற்று பினோலி காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது வெளியே சென்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பிர்ஜா ராமிடம், தனது மகள் குறித்து ஓம்வீர் கேட்டுள்ளார். அதற்கு அடுத்த வாரம் வந்து பார்க்குமாறு, இன்ஸ்பெக்டர் அலட்சியமாக பதிலளித்துள்ளார். மேலும், தினமும் காவல் நிலையத்துக்கு வந்து செல்லும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மிரட்டும் தொனில் கூறியுள்ளார்.
அறைந்த இன்ஸ்பெக்டர்
இதனால் அதிருப்தி அடைந்த ஓம்வீர், புகார் கொடுத்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை எனக் கூறுகிறார். இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் பிர்ஜா ராம், ஓம்வீரை கன்னத்தில் அறைந்து அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மகளை காணவில்லை எனக் கூறி புகார் அளிக்க வந்த தந்தையை அடித்த இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் பிர்ஜா ராம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.