பசுக்களுக்கு என இனி "ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்".. உ.பி முதல்வர் ஆதித்யநாத் அறிவிப்பு.. எப்படி இயங்கும்?
லக்னோ: மனிதர்களுக்கு பாதிப்பு என்றால் உடனடியாக ஆம்புலன்ஸ் வருகிறதோ, அதேபோல் இனி பசுக்களுக்கும் பாதிப்பென்றால் ஆம்புலன்ஸ் வரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது விலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிவிப்பு நிச்சயமாக தமிழ்நாட்டிலோ, புதுச்சேரியிலோ அல்ல உத்தரபிரதேசத்தில்தான். இந்தியாவிலேயே முதல் முறையாக பசுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆம்புலன்சில் அழைத்து சென்று கால் நடை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடுத்த மாதம் தொடங்க உள்ளார்.

மனிதர்களுக்கு விபத்தோ, நோய் பாதிப்போ ஏற்பட்டால் ஆம்புலன்ஸை அழைக்கிறோம். டெல்லி, சென்னை, கல்கத்தா போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னா பின்னமாகி ஆம்புலன்ஸ் வந்து நம்மை அழைத்து செல்வதற்குள் உயிர் பிழைப்போமா என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் பசுக்கள் மீதும் கருணை கொண்டுள்ள உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் மனிதர்களைப் போலவே விலங்குகள் மீது அக்கறை கொள்ளவேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சவுத்ரி மதுராவில் செய்தியாளர்களிடம் பேசியபோது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பசுக்கள் பராமரிப்பு மீது மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், மனிதர்களைப் போலவே நோய் பாதிப்பு ஏற்படும் பசுக்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை தேவை என தெரிவித்துள்ளதாக கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பசுக்கள் பாதுகாப்பிற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்கு அபினவ் ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அபினவ் ஆம்புலன்ஸ் திட்டம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், இதற்காக பிரத்யேக அவசர எண் அறிவிக்கப்படும் என கூறினார். மேலும், பசுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அழைப்பு வந்த 20 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுவிடும் என தெரிவித்த அமைச்சர் லட்சுமி நாராயன் சவுத்ரி, இதற்காக லக்னோவில் பிரத்யேக கால் சென்டர் நிறுவப்படும் என கூறினார்.
இந்நிலையில் இந்த சேவை பசுக்களுக்கு மட்டும்தானோ, பிற இன மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்த கால்சென்டரை அணுகலாமா என விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். புளுகிராஸ் போல பசுக்களுக்கென பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை என்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எது எப்படியோ மனிதர்களை அழைத்துசெல்லும் ஆம்புலன்ஸ் வந்தாலே நகரங்களில் வழிவிடாமல் வாகன ஓட்டிகள் முந்திச் செல்லும் நிலையில், பசுக்களுக்கான ஆம்புலென்ஸ் வரும்போது வழிவிடுவார்களா என்ன என்றெல்லாம் ஐயம் தேவையில்லை. ஏனெனில் கால்நடைகள் பெரும்பாலும் கிராமங்களைச் சார்ந்தவை என்பதால் பசுக்களை அழைத்துவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நகரவாசிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் இருக்காது.












Click it and Unblock the Notifications